நல்வரவு_()_


Saturday 30 January 2010

"பூஸா" விலிருந்து ஒரு காதல்...


இக்கதை பல வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம்.

என்னோடு படித்த நண்பியின், அண்ணாவின் நண்பன் ஒருவரின் கடிதம்.. கவிதை..

இலங்கையிலே முன்பு, திடீர்த்திடீரென இராணுவத்தினரால் சுற்றி வளைப்பு நடக்கும். அந்நேரம் அதில் அகப்படும் ஆண்பிள்ளைகளைப் பிடித்துச் செல்வார்கள்.. தமது மனம் போன போக்கிலே பிடிப்பார்கள்.. சிலவேளை காப்பாற்றலாம், அல்லது அவர்களின் மூட்டைப் பொறுத்து, என்ன இருந்தாலும் பிடித்தவரைக் கூட்டிப்போய்விடுவார்கள் காம்ப்க்கு(முகாமுக்கு).

ஒருதடவை இப்படித்தான் இருந்தாற்போல் சுற்றிவளைத்து... அகப்பட்ட ஆண்பிள்ளைகளையெல்லாம் அப்படியே அள்ளிக்கொண்டு போனார்கள்.. போன வேகத்திலேயே.. கொழும்பிலுள்ள.. பிரபல்யமான ஒரு ஜெயில்.. அதுதான் ”பூஸா..” அங்கு அனுப்பிவிட்டார்கள்.

அப்படி அகப்பட்ட அப்பாவிகளில் ஒருவர் தான், இந்த நண்பன். இவரைப் பூஸா முகாமுக்குக் கொண்டுபோனபின், என் நண்பியின் அண்ணனுக்கு ஒரு கடிதம் அனுப்பினாராம்.. அதில் அவர் குறிப்பிட்டிருந்தது... அவர்களூரிலே ஒரு பெண்ணை, தான் தினமும் பார்த்துவந்தேன்... எனக்கு மிகவும் அவவைப் பிடித்துவிட்டது, ஆனால் பல தடவை கதைக்க முயன்றும், முடியாமல் போய்விட்டது. அதுக்குள் என்னை இங்கு கூட்டிவந்துவிட்டார்கள். எனவே எனக்காக நீ, அப்பெண்ணிடம் சென்று சம்மதம் கேட்டுச் சொல்வாயா?? என விபரமெல்லாம் சொல்லி கடிதம் அனுப்பியிருந்தாராம். இதைப் படித்துவிட்டு, நண்பியின் அண்ணாவும் போய் விசாரித்திருக்கிறார், விசாரித்த வேளை அப்பெண்பிள்ளை சொன்னகதை, தனக்கு அவ்வூரிலேயே இருக்கும் தன் மாமாவின் மகனுக்கு ஏற்கனவே திருமணம் நிட்சயிக்கப்பட்டிருக்கிறது என்று.

இதனை பூஸாவிலிருக்கும் நண்பனுக்கு மடலில் எழுதி அனுப்பினார், அதைப்படித்த நண்பன்... அதற்குப் பதிலாக, ஒரு கவிதையாக மடல் அனுப்பியிருந்தாராம்..

அக்கவிதையைக் கண்டதும், உடனே என் நண்பிக்கு, எனது ஞாபகம் வந்துவிட்டது, அதிராவுக்குத்தான் கவிதை என்றால் பிடிக்குமே.. என, அண்ணாவுக்குத் தெரியாமல் அக்கடிதத்தைத் திருடி, ஸ்கூலுக்குக் கொண்டுவந்து தந்தார்.. தந்து சொன்னா.. கெதியா பார்த்தெழுதிவிட்டுத்தா.. மீண்டும் கொண்டுபோய் இருந்த இடத்திலேயே வைத்துவிட வேண்டும் என்று.

நானும் அவசரமாகக் கொப்பி பண்ணிவிட்டுக் கொடுத்தேன்.. ஆனால் பின்பு அதைத் தொலைத்துவிட்டேன்... இருப்பினும் அதிலிருந்த சில வரிகள் என் மனதிலே ஆழமாகப் பதிந்துவிட்டது... அது இதுதான்...


அன்றொரு
அம்புஜத்தைக்
கண்டேன்..அதில்
என் மனதை
பறிகொடுத்தேன்..
பின்னர் - அது
ஆதவனுக்குரியதென
அறிந்து - என்
ஆசைக்கு விலங்கிட்டேன்..

…....................

…............................

சந்ததியை
வளர்க்க விரும்பும்
பெற்றோருக்கு
இவன் என்றும்
வில்லனாக
இருக்க மாட்டான்!!


....இடை வரிகளை மறந்துவிட்டேன்.


நான் இல்லை... நான் இல்லை....




ஜெயில் என்றதும், ஒரு பழைய ஜெயில் நினைவுக்கு வந்துவிட்டது.....

இது இன்வெரறி என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது. உல்லாசப்பிரயாணிகள் பார்வையிடும் இடம். 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.



இதே இடத்தில் பிரபல்யமான ஒரு பழைய ராசாவின் அரண்மனையும்(Castle) அமைந்துள்ளது..



தூரத்திலிருந்து ஒரு தோற்றம்...




அதனைச் சுற்றி இப்பவும் பூஞ்சோலையாக, நந்தவனமாக்கி வைத்து, அழகாக பாதுகாத்து வருகிறார்கள். முன்பு ராசாவைப் பாதுகாக்க.. அரண்மனையைச் சுற்றி பெரிய நீரோட்டம் செய்து, அதில் முதலைகள் வளர்த்தார்களாம்... அதெல்லாம் இப்பவும் அப்படியே இருக்கிறது...

இதில் தெரியும் நீரோடையூடாகத்தான், ராசா, அரண்மனையிலிருந்து படகில் சென்று, ஆற்றில் இறங்கி, ஏனைய இடங்களுக்குப் பயணம் செய்வாராம்..



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதிலெல்லாம், அதிரா ஓடி ஓடிப் படமெடுத்தேனாக்கும்... பலதடவைகள்.. ஆனால் இப்போ அவற்றைக் காணவில்லை(படங்களை).




~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாராவது பார்க்க விரும்புபவர்கள் வாருங்கள்..... அழைத்துச் சென்று காட்டலாம்.... அழகான மலைத்தொடர்களிடையேதான் அமைந்திருக்கிறது..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பின் இணைப்பு:


காதல் என்பது???

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மணிக் கணக்காகப்
பேசிக்கொண்டிருப்பது..
விஷயமே இல்லாமல்...

Tuesday 26 January 2010

இது!!! நீங்களும் நானு... ம்.

"தேம்" பி அழுவோரை... வாரி அணைத்திடும்..லண்டன்
"தேம்" ஸ் நதி..





கேள்வியும், அர்த்தமுள்ள நகைச்சுவை கலந்த பதில்களும்...

ஒரு பிரபலமான பத்திரிகையில், பல பல வருடங்களுக்கு முன்னர் வெளியான, மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பிரபலமான ஒருவரின் பதில்கள்..

இது cut and paste அல்ல.. நானே ரைப் பண்ணியது..

கேள்வி:-
கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தெரியாதவர்களை என்ன செய்யலாம்??

பதில்:-
வள்ளல் சீதக்காதியிடம் பாடம் கேட்கச் சொல்லலாம்.

உடலை வைத்து தொழில் நடத்தும் ஒரு பெண்ணிடம், அவளது தொழிலை நிறுத்தும்படியும், அவளது தேவைக்கேற்ற பணத்தை மாதாமாதம் தருவதாகவும், சொன்னார் சீதக்காதி.

கோயில் மாடத்தில், மாதாமாதம் அவளுக்குத் தேவையான பணம் வைக்கப்படும், அவள் வந்து எடுத்துச் செல்லலாம் என்பதுதான் ஏற்பாடு.

அப்படியே முதல்மாதம் வந்து பணமெடுத்துச் சென்றவள் பின்னர் வரவில்லை. 7 வருடங்களின் பின், அப்பெண் சீதக்காதியிடம் வந்தாள்.

"ஐயா எனக்குப் பணம் தந்து உதவுங்கள்!! மகளுக்குக் கல்யாணம்" எனக் கேட்டாள்.

ஒரு தொகைப் பணத்தை உதவியாகக் கொடுத்த வள்ளல் சீதக்காதி, “கோயில் மாடத்தில் சென்றுபார்” என்றார்.

அங்கே மாடத்தில், ஏழு வருட காலமாக, அவள் வந்து எடுக்கத் தவறிய பணம், அப்படியே சேர்ந்திருந்தது. வாங்க வருபவர் மறந்தாலும், வாக்குக் கொடுத்தவர் மறக்காமல் இருந்திருக்கிறார்.

நம்மில் சிலர் இருக்கிறார்கள், கடன் வாங்கியதைக்கூட மறந்துவிடுவார்கள்.


கேள்வி:-
எதற்கெடுத்தாலும் குறுக்குக் கேள்வி கேட்பவர்களை என்ன செய்யலாம்?

பதில்:-
குறுக்குக் கேள்விகளைப் பொறுமையாக நேர்ப்படுத்திப் பாருங்களேன். ஒரு குட்டிக் கதை.

ஓர் ஆசிரியர், பொறுமையாகப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

“உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” எனச் சொன்னார். . அப்போது ஒரு குறும்புக்கார மாணவன் குறுக்குக் கேள்வி கேட்டான்:

"சில பண்டங்களுக்கு உப்பே இல்லையே. லட்டு போன்ற இனிப்பு வகைகளிலும் உப்புக் கிடையாது. அதற்காக அவற்றையெல்லாம் குப்பையில் போடலாமோ?” எனக் கேட்டான்.

சிலர் என்றால் முறைத்திருப்பார்கள், அந்த ஆசிரியர் அமைதியாகப் பதில் சொன்னார்.

“உண்மையில் உப்பு இல்லாத பண்டமே கிடையாது, லட்டு, ஜிலேபி, போன்ற இனிப்புக்களிலும் உப்பு இருக்கின்றது. அதுபோக, அறுசுவைப் பதார்த்தங்களிலும் உப்பு இருக்கிறது. எப்படித் தெரியுமா? இதோ பார் என எழுதிக் காட்டினார்...

இன் + உப்பு = இனிப்பு
கச + உப்பு = கசப்பு
துவர் + உப்பு = துவர்ப்பு
எரி + உப்பு = எரிப்பு
கை + உப்பு = கைப்பு
புளி + உப்பு = புளிப்பு.

இது இடைவேளை.......
United Kindom Parliement.

வினாத் தொடர்கிறது.........

கேள்வி:-
இந்தக் காலத்துப் பிள்ளைகளின் புத்திசாலித்தனம், வளர்ந்திருக்கிறதா? தேய்ந்துபோகிறதா?

பதில்:-
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன், நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்..

ஒரு சின்னப் பையன், தன் அப்பாவிடம் சென்று, “அப்பா, நீங்கள் இந்த உலகத்தில் ஒரு மனிஷனாகப் பிறந்தது, என்னுடைய அதிர்ஷ்டம்” என்றான். அப்பாவுக்கு மஹா சந்தோசம்.

ஏன் மகனே அப்படிச் சொல்கிறாய்? எனக் கேட்டார். மகன் சொன்னான்...

"நீங்கள் ஒரு கரடியாகப் பிறந்திருந்தால், இந்நேரம் நானும் ஒரு கரடிக்குட்டியாகத்தானே இருந்திருப்பேன்”


கேள்வி:-
வேலைக்காரர்களை இளக்காரமாக நினைத்து, அடக்கி ஒடுக்குபவர்களைப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

பதில்:-
ஒரு அடிமை இருந்தான், தன்னுடைய முதலாளிக்கு மிக விசுவானமானவன்.

ஒருநாள் அந்த அடிமை, முதலாளியின் கால்களை அமுக்கிக்கொண்டிருந்தான். முதலாளி கொஞ்சம் ஜாலி டைப். பணத்திமிரும் அதிகம். முதலாளி அடிமையிடம் சொன்னார்..

“டேய்! உனக்கு கல்யாணம் செய்துவைக்க முடிவு செய்துவிட்டேன்” என்றார். அடிமைக்கோ அளவில்லாத மகிழ்ச்சி.

“ஆனால் ஒரு நிபந்தனை” என்றார் முதலாளி .

என்ன எஜமான்?

“உன்னுடைய மனைவியும், அப்பப்ப எனக்கு கால் அமுக்கிவிட வேண்டும். சம்மதமா” என்றார் முதலாளி..

“சரிங்க எஜமான்”| என்றான் அடிமை. முதலாளிக்கு மஹா சந்தோஷம்.

“ஆனால் ஒரு நிபந்தனை”” என்றான் அடிமை.

“என்னடா நிபந்தனை| எனக்கேட்டார் முதலாளி.

அடிமை சொன்னான்,

“உங்கள் மகளையே எனக்குத் திருமணம் முடித்து வைக்க வேண்டும்”.

கேள்வி:-
எப்போதுமே, எதிலும் குறைகண்டு பிடிப்பவர்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:-
ஏசுநாதரும், அவரது சீடர்களும் சென்றுகொண்டிருந்த பாதையில் ஒருநாய் செத்துக்கிடந்தது. நாற்றமோ தாங்க முடியவில்லை. ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. சீடர்கள் மூக்கைப் பொத்திக்கொண்டார்கள், ஏசுநாதர் மட்டும் நாயைக் கவனித்துவிட்டு,"அடடா, அழகான பற்கள்” என வியந்து கொண்டார்.

இந்த நாற்றத்தைச் சகித்துக்கொண்டு, உங்களால் எப்படி வியக்க முடிகிறது? என்று ஒரு சீடர் கேட்டார்.

அதற்கு ஏசுநாதர் சொன்னார்..
"எதிலும், நல்லவற்றையே காண்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்”.

கேள்வி:-
பெண்களை ஆண்கள் கொடுமைப்படுத்துவதை மட்டும்தான் கண்டிப்பீர்களா?ஆண்களைப் பெண்கள் அதிகாரம் செய்வது உமக்குத் தெரியாதோ?

பதில்:-
தெரியுமே.. ஒரு அம்மா, மகனிடம் விடுகதை ஒன்று கேட்டார் “சிங்கம் போல உள்ளே வரும், ஆடு போல வெளியே போகும், அது என்ன?”.

மகன் சட்டெனப் பதில் சொன்னான் “அது அப்பா”.

~~~~~~~படிச்சுப் பயன் பெறுங்கோ~~~~~~~

பின் இணைப்பு..

அன்பு இளமதி, தன் செல்லங்களை, எனக்காக சில நாட்கள், விளையாட அனுப்பியது..


இன்னும் நாங்கள் விளையாடி முடியேல்லை...

Saturday 23 January 2010

தத்துவ முத்துக்கள் தொகுப்பு -4

இனியும் இது வரலாமோ.... ~கோபம்~




()ஒரு மனிதன் கோபம் அடையும்போது, அவர் மனதுக்குள்ளேயே புயல் எழும்புகிறது, மனச்சாட்சியை அது அழித்துவிடுகிறது.

()சூழ்நிலையும் மனிதர்களும் துன்புறுத்தினாலும், ஒரு அறிவாளி, தன் நிலையைவிட்டு அசையாமல், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிருக்க வேண்டும்.

()கோபம் முதற்கட்டத்தில் வென்றதுபோல் தெரிந்தால், நிரந்தரமாகத் தோல்வி அடையப்போகிறது என்று பொருள்.

()எது நடக்கக்கூடாது என்பதற்காக கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது.

()மனதில் பகைமையை அடக்கி வைத்தல், நேரடிப் போரை விடக் கொடியது.



()அறுந்த பட்டமும், ஆத்திரக்காரரின் பேச்சும், எதிலே போய் முடியுமென்பது, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

()சீறிச் சினப்பதற்கு 60 தசைகள் இயங்க வேண்டும், ஆனால் சிரிப்பதற்கு 13 தசைகள்தான் இயங்க வேண்டும், ஆகவே வீணே ஏன் நாம் சக்தியை இழக்க வேணும்?

()உணர்வுகளும் உணர்ச்சிகளும், நமக்கு அடங்கவேண்டுமே தவிர, நாம் அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

()ஒரு பூனை திருட்டுப்போய்விட்டதென நீங்கள் சட்டத்தை நாடினால், ஒரு பசுவையே இழக்கவேண்டிவரும்.

()கடன் கொடுத்தவருக்கு கோபம் கூடாது, கடன் வாங்கியவருக்கு ரோசம் கூடாது.

()நாய், தன் நாக்கை ஆட்டாமல் வாலை ஆட்டுவதினால்தான், அதற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.

()உண்மையான வீரன் யார் என்றால், எதிரிகளை அதிகமாகக் கொல்லும் உடல் வலிமையுள்ளவர் அல்ல, தனக்கு வரும் கோபத்தை அடக்கிக் கொள்பவரே.


Cool down பூஸ்.... cool down...
A silent tongue and true heart are the most admirable things on earth. ...
இத்தனை தத்துவ முத்துக்களையும் படித்தபின்பும், கோபம் யாருக்கும் வருமோ?...


பின் இணைப்பு...

பூனை விரட்டி வளர்ப்பவர்களெல்லாம், பூனையைக் கோயிலில் கண்டதும், ஓடிச் சென்று படமெடுக்கிறார்கள், அதுவும் பாருங்கள் கிட்டப்போய் எடுக்கப் பயமாக்கும்... நிழல்பட கருவி, படமெடுத்தவரின் நிழலையும் படமெடுத்துவிட்டதே




பூனையின் அட்டகாசம் பொறுக்கமுடியாமல், ரின்னிலே அடைத்துவிட்டாராம்.... என்ன கொடுமை இது...


அப்பாடா.. கோபமில்லாமல், பொறுமையாகப் படித்த உங்களுக்கு.... மிக்க நன்றி.

Monday 18 January 2010

அதிராவைத் தேடிய அன்னம்



இரண்டு நாட்களுக்கு முன்பு, என் ஜீப்பில் தனியே போய்க்கொண்டிருந்தேன். நேரம் இரவு ஏழு மணியைத் தாண்டியிருந்தது. வீடு போய்ச்சேர இன்னும் ஒரு மணித்தியாலம் எடுக்கும். வின்ரர் நேரம் என்பதால் 3/3.30 க்கே நன்கு இருட்டத் தொடங்கிவிடும்.

மனதில் பதட்டத்தோடு.. ஓடிக்கொண்டிருக்கிறேன். நான் ஓடிய பாதை 40 mile/hour. அதிலிருந்து 70 mile/hour Motorway இல் என்ரர் பண்ண வேண்டும். பிரித்தானியாவில் Highway என்பதை Motorway என்றுதான் அழைப்பது வழக்கம். கனடா, அமெரிக்காப் பகுதிகளில்தான் ஹைவே என்கிறார்கள். ஏனைய நாடுகள் பற்றித் தெரியவில்லை.



அப்போ நான் 40 மைல் வேகத்திலிருந்து, 70 மைல் வேகத்துக்கு, கொஞ்சம் கொஞ்சமாக கூட்டியபடி வளைவான பாதையூடாக வந்துகொண்டிருந்தேன் மோட்டவேயில் நுழைய. அப்பொழுது பார்க்கிறேன், மோட்டவே வெறிச்சோடிக்கிடக்கிறது. வழமையான அந்த நேரம், உள் நுழைய முடியாதபடி வாகனமாக இருக்கும். இன்று இப்படித் தெரிந்ததும் எனக்கு நெஞ்சு பக்கென்றது. தனியே வருகிறேன். ஏதாவது பாதை மூடிவிட்டார்களோ, திரும்பவேண்டிவருமோ என்றெல்லாம் மனம் எண்ணியபடி, வளைவு நேரானதும் முன்னே பார்த்தேன்.

என் முன்னே வந்த கார்கள் எல்லாம், மோட்டவேயில் நுழையாமல் அப்படியே நிற்கின்றன. நானும் நிறுத்திவிட்டேன். என்னவென்றே புரியாமல் தடுமாறியபடி மோட்டவேயைப் பார்க்கிறேன்... அங்கே இரண்டு மூன்று போலிஸ் கார்கள் ரோட்டின் குறுக்கே, முன்னே போவதும் பின்னே போவதுமாக நடனமாடுவதுபோல, அசைந்து கொண்டிருந்தன.



சில பொலீஸ்காரர்கள், கையிலே பொலீஸ் ஜக்கெட்டைப் பிடித்தபடி குறுக்கும் நெடுக்குமாக ஓடுவது தெரிந்தது. இது என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்தேன், என் கண்களையே நம்பமுடியாமல், பெரிய ஒரு சுவான்(swan), கிட்டத்தட்ட ஒரு மாட்டுக்கன்றின் அளவிருக்கும் ரோட்டின் குறுக்கே ஓடிக்கொண்டிருந்தது. சுவான் பிள்ளையைப் பிடிப்பதற்காகவே இவர்கள் இந்த ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தார்கள். பொலீஸைப் பார்த்தால் நெடுநேரம் ஓடிக் களைப்படைந்து விட்டவர்கள்போல தெரிந்தது.



சுவான் பிள்ளையும் களைத்துவிட்டார், ஓடுகிறார் பின்னர் ரோட்டிலே படுக்கிறார், அவர் படுத்ததும் பொலீஸ் கிட்டப் போகிறார்கள், உடனே எழுந்து இவர் ஓடுகிறார். இப்படியே நடந்துகொண்டிருந்தது. எங்கேயோ பக்கத்து ஆற்றிலிருந்து வழிமாறி வந்து மோட்டவேயில் நுழைந்திருக்கிறார். அதனால்தான் பாதையெல்லாம் மூடிவிட்டு, சுவானைப் பிடிக்கும் முயற்சியில் பொலீஸ் தோற்றுக் கொண்டிருந்தார்கள். குளிர் வேறு அவர்களை விறைக்க வைத்துக்கொண்டிருந்தது.

நானும் நன்கு ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தவேளை, திடீரென, சுவான் மோட்டவேயை விட்டு இறங்கி நான் நின்ற பாதைக்கு ஓடிவந்தது. அதுவும் என் ஜீப்பை நோக்கி. அன்னம்போல வாழப் பழக வேண்டும் என அடிக்கடி சொல்லும்..... “அதிராவைத் தேடி அன்னமா?” அதிர்ந்து விட்டேன். என் ஜீப்பின் பக்கத்திலே ஜன்னலுக்குக் கிட்ட வந்துவிட்டது, என் கை துரு துருவென்றது, பொக்கட்டிலே இருக்கும் போனை எடுத்து, படமெடுப்போம் என்று. ஆனால் பின்னாலே பொலீஸ் துரத்திக்கொண்டே வந்தமையால், பயத்தில் அப்படியே இருந்துவிட்டேன். தொட்டில் பழக்கம், பொலீஸ், ஆமி என்றால், தானாடாவிட்டாலும் தசை ஆடும்.

என் ஜன்னலோரம் வந்த சுவான்.. அப்படியே ஜீப்பைச் சுற்றிக்கொண்டு முன்னாலே சென்று, பக்கத்திலிருந்த மரங்களுக்குள் சென்றது. பொலீஸும் விடுவதாக இல்லை. கலைத்துக்கொண்டே போனார்கள். சொல்வார்களே ”முயல் பிடிக்கும் நாயை மூஞ்சையைப் பார்த்தால் தெரியும்” என்று. அப்படித்தான், அவர்களைப் பார்த்தால் சுவானைப் பிடிப்பார்கள்போலத் தெரியவில்லை எனக்கு. பின்னர் பாதையைத் திறந்துவிட்டார்கள். நான் வந்து சேர்ந்துவிட்டேன். இப்படியான பல காட்சிகளை ரீவியில் பார்த்து ரசித்திருக்கிறேன், ஆனால் நேரில் பார்த்தபோது, அது ஒரு இன்ப அனுபவமாக இருந்தது.

பின் குறிப்பு:
அன்னப்பறவையை நான் இதுவரை பார்க்கவில்லையாக்கும், சுவான் தான் அன்னம் என்று ஒரு கணிப்பு.

பின் இணைப்பு:
இது, அன்புச் ஸாதிகா அக்கா, என் கொசுமெயிலுக்கு, எனக்காக அனுப்பிய அன்புப் பரிசு ~பூஸ்~
அவரது நண்பியின் செல்லம். பிங் ~போ~ போட்டிருக்கிறார் அப்போ Girl தான்.

Wednesday 13 January 2010

நீயும் என்னைக் காதலித்தாயா??...

மெளன பூகம்பம்




தாடியையும் சோகத்தையும்
சரி விகிதத்தில்
வளர்த்துக்கொண்டு
வாழ்பவன் அவன்,
அவளின் ஞாபகங்களே
அவனுக்கு சுவாசம்!

ன்னிரண்டு பாலைவன
வருடங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க
நேருகிறது எங்கெனில்......
ஒரு ரயில் நிலையத்தில்

ப்போதெனில்.....
ஒரு நள்ளிரவில்
எதிரெதிர் திசையில்
செல்லும் ரயில்கள்
இளைப்பாறிக்கொள்ளும்
அந்த இடைவெளியில்

யில்களின் எதிரெதிர்
பெட்டிகளில் பழைய
கண்கள் நான்கு
பார்த்துக்கொள்கின்றன
அப்பொழுது - மனதில்
எத்தனை மெளன பூகம்பம்!!!

ன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக் காணாமல்
போட்டுவிட்டன கண்கள்....
நீதானா?.. இல்லை,
வேறொருவன் கண்களால்
நான் பார்க்கின்றேனா?
மனதின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு பிரவாகம்

தயத்தின் ஆழத்தில் கிடந்த
உன்முகம்-- மிதந்து மிதந்து
மேலே வருகிறது....
ஓ... வருஷங்கள்
எத்தனையோ
கழிந்த பிறகும்
என் மார்பு தடவும்
அதே பார்வை.. அதே நீ.....

ன் பழையவளே!!!
என் கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே....
உன் நினைவுகளில்
நான் எத்தனையாவதாக
இருக்கிறேன்?.. அறிவாயா?
என் மீசைக்கும்
என் காதலுக்கும்
ஒரே வயதென்று அறிவாயா?
உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரைகூடத்
தோற்றுப்போனதே....

ஓ... நீ மாறியிருக்கிறாய்..
உன் புருவ அடர்த்தி
கொஞ்சம் குறைந்திருக்கிறது
உன் சிகப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன் இதழ்களில் மட்டும்
அதே பழைய பழச்சிவப்பு
இப்போதும் நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?
உன் நினைவுகள் - உன்
கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம் - ஆனால்
என் நினைவுகள்
உன்னைப்போலவே
விழித்திருக்கின்றன

... இந்த ரயில் வெளிச்சம்
நீ அழுவதாய் எனக்கு
அடையாளம் காட்டுகிறது
வேண்டாம்!!!!!
விழியில்ஒழுகும் வெந்நீரால்
மடியில் உறங்கும் உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!!!

தோ விசில் சத்தம் கேட்கிறது..
நம்மில் ஒரு வண்டி
நகரப்போகிறது
போய்வருகிறேன் அல்லது
போய் வா....!!!

விதியை விடவும்
நான் ரயிலை
நம்புகிறேன் - அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்
"நீயும் என்னைக் காதலித்தாயா???"


ரெயின் போய் விட்டது..



தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.. நான்
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்...(ரெயின் போய் விட்டது..

~~~~~~~~ ~~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~ ~~~~~~~~~~ ~~~~~~~~~



ஒகே ஓகே நான் சொல்கிறேன்...


அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..


இது சிலருக்கு மட்டும்:):)


இனிய பொங்கலுக்கு ~அடுத்த தின~ பொங்கல் வாழ்த்துக்கள்.

Tuesday 5 January 2010

தத்துவ முத்துக்கள் தொகுப்பு -3

வாழ்க்கை...........


இதுவல்லவோ பொருத்தம்...

ஒருவர் சுமையை இன்னொருவர் வாங்கிக்கொள்கிற மனப்பக்குவம்தான் மணவாழ்க்கையின் உயிர்நாடி.

மனிதவாழ்க்கை மலருவது ஒரே முறைதான்,
அந்த ஒரே வாழ்க்கையை, ஒரே உயிருக்கே, கொடுத்து வாழ வேண்டும்.

தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை
காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை.

காதலிப்பதற்கு அழகு இருந்துவிட்டால் மட்டும் போதாது,
படிப்பு, பதவி, அந்தஸ்து, செல்வம் இவையும் போதாது,
தைரியம் வேண்டும், கடைசிவரை உறுதியோடு
நிலையாக நின்று, வெற்றியைக் காணும் திறமை வேண்டும்.

பெண் ஒருவரால் கொடியாகத்தான் இயங்க முடியும்,
நிமிர்ந்து நிற்கப் பலத்தைக், கொம்பிடம் பெறுவது கொடியின் இயல்பு.

ஒரு பெண்ணின் வாழ்வுக்கு, மகிழ்ச்சியையும், மலர்ச்சியையும்
கொடுக்க வளர்க்கப்படும் அக்கினி, சிலவேளைகளில்,
இன்னொரு பெண்ணின் ஆசாபாசங்களைச் சுட்டுச் சாம்பலாக்குகின்றது.

பேய்க்கு வாழ்க்கைப்பட்டபின் "புளியமரத்தில் ஏறு", என்றால் ஏறித்தான் ஆகவேண்டும்.

காதல் என்பது பூவைப் போன்றது, ஒரு மரத்தில் பூக்கின்ற எல்லாப் பூக்களும் காய்ப்பதில்லை,
ஏராளமானவை பூவாகவே உதிர்ந்துவிடும்.

நினைத்தவுடன் திரும்பக்கூடிய இடமென்றால், யோசிக்காமல் கால் வைக்கலாம் -ஆனால் போனால் திரும்பவே முடியாத இடமென்றால், நன்றாக யோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டும்.

ஒரு பெண், தன் அழுத்தமான பொறுமையினால்,
ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கலாம், தன் அடங்காபிடாரித் தனத்தாலே அதை அழித்து, வாழ்க்கையை நிர்மூலமாக்கிக்கொள்ள வேண்டியும் ஏற்படலாம்.