நல்வரவு_()_


Saturday 30 January 2010

"பூஸா" விலிருந்து ஒரு காதல்...


இக்கதை பல வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம்.

என்னோடு படித்த நண்பியின், அண்ணாவின் நண்பன் ஒருவரின் கடிதம்.. கவிதை..

இலங்கையிலே முன்பு, திடீர்த்திடீரென இராணுவத்தினரால் சுற்றி வளைப்பு நடக்கும். அந்நேரம் அதில் அகப்படும் ஆண்பிள்ளைகளைப் பிடித்துச் செல்வார்கள்.. தமது மனம் போன போக்கிலே பிடிப்பார்கள்.. சிலவேளை காப்பாற்றலாம், அல்லது அவர்களின் மூட்டைப் பொறுத்து, என்ன இருந்தாலும் பிடித்தவரைக் கூட்டிப்போய்விடுவார்கள் காம்ப்க்கு(முகாமுக்கு).

ஒருதடவை இப்படித்தான் இருந்தாற்போல் சுற்றிவளைத்து... அகப்பட்ட ஆண்பிள்ளைகளையெல்லாம் அப்படியே அள்ளிக்கொண்டு போனார்கள்.. போன வேகத்திலேயே.. கொழும்பிலுள்ள.. பிரபல்யமான ஒரு ஜெயில்.. அதுதான் ”பூஸா..” அங்கு அனுப்பிவிட்டார்கள்.

அப்படி அகப்பட்ட அப்பாவிகளில் ஒருவர் தான், இந்த நண்பன். இவரைப் பூஸா முகாமுக்குக் கொண்டுபோனபின், என் நண்பியின் அண்ணனுக்கு ஒரு கடிதம் அனுப்பினாராம்.. அதில் அவர் குறிப்பிட்டிருந்தது... அவர்களூரிலே ஒரு பெண்ணை, தான் தினமும் பார்த்துவந்தேன்... எனக்கு மிகவும் அவவைப் பிடித்துவிட்டது, ஆனால் பல தடவை கதைக்க முயன்றும், முடியாமல் போய்விட்டது. அதுக்குள் என்னை இங்கு கூட்டிவந்துவிட்டார்கள். எனவே எனக்காக நீ, அப்பெண்ணிடம் சென்று சம்மதம் கேட்டுச் சொல்வாயா?? என விபரமெல்லாம் சொல்லி கடிதம் அனுப்பியிருந்தாராம். இதைப் படித்துவிட்டு, நண்பியின் அண்ணாவும் போய் விசாரித்திருக்கிறார், விசாரித்த வேளை அப்பெண்பிள்ளை சொன்னகதை, தனக்கு அவ்வூரிலேயே இருக்கும் தன் மாமாவின் மகனுக்கு ஏற்கனவே திருமணம் நிட்சயிக்கப்பட்டிருக்கிறது என்று.

இதனை பூஸாவிலிருக்கும் நண்பனுக்கு மடலில் எழுதி அனுப்பினார், அதைப்படித்த நண்பன்... அதற்குப் பதிலாக, ஒரு கவிதையாக மடல் அனுப்பியிருந்தாராம்..

அக்கவிதையைக் கண்டதும், உடனே என் நண்பிக்கு, எனது ஞாபகம் வந்துவிட்டது, அதிராவுக்குத்தான் கவிதை என்றால் பிடிக்குமே.. என, அண்ணாவுக்குத் தெரியாமல் அக்கடிதத்தைத் திருடி, ஸ்கூலுக்குக் கொண்டுவந்து தந்தார்.. தந்து சொன்னா.. கெதியா பார்த்தெழுதிவிட்டுத்தா.. மீண்டும் கொண்டுபோய் இருந்த இடத்திலேயே வைத்துவிட வேண்டும் என்று.

நானும் அவசரமாகக் கொப்பி பண்ணிவிட்டுக் கொடுத்தேன்.. ஆனால் பின்பு அதைத் தொலைத்துவிட்டேன்... இருப்பினும் அதிலிருந்த சில வரிகள் என் மனதிலே ஆழமாகப் பதிந்துவிட்டது... அது இதுதான்...


அன்றொரு
அம்புஜத்தைக்
கண்டேன்..அதில்
என் மனதை
பறிகொடுத்தேன்..
பின்னர் - அது
ஆதவனுக்குரியதென
அறிந்து - என்
ஆசைக்கு விலங்கிட்டேன்..

…....................

…............................

சந்ததியை
வளர்க்க விரும்பும்
பெற்றோருக்கு
இவன் என்றும்
வில்லனாக
இருக்க மாட்டான்!!


....இடை வரிகளை மறந்துவிட்டேன்.


நான் இல்லை... நான் இல்லை....




ஜெயில் என்றதும், ஒரு பழைய ஜெயில் நினைவுக்கு வந்துவிட்டது.....

இது இன்வெரறி என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது. உல்லாசப்பிரயாணிகள் பார்வையிடும் இடம். 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.



இதே இடத்தில் பிரபல்யமான ஒரு பழைய ராசாவின் அரண்மனையும்(Castle) அமைந்துள்ளது..



தூரத்திலிருந்து ஒரு தோற்றம்...




அதனைச் சுற்றி இப்பவும் பூஞ்சோலையாக, நந்தவனமாக்கி வைத்து, அழகாக பாதுகாத்து வருகிறார்கள். முன்பு ராசாவைப் பாதுகாக்க.. அரண்மனையைச் சுற்றி பெரிய நீரோட்டம் செய்து, அதில் முதலைகள் வளர்த்தார்களாம்... அதெல்லாம் இப்பவும் அப்படியே இருக்கிறது...

இதில் தெரியும் நீரோடையூடாகத்தான், ராசா, அரண்மனையிலிருந்து படகில் சென்று, ஆற்றில் இறங்கி, ஏனைய இடங்களுக்குப் பயணம் செய்வாராம்..



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதிலெல்லாம், அதிரா ஓடி ஓடிப் படமெடுத்தேனாக்கும்... பலதடவைகள்.. ஆனால் இப்போ அவற்றைக் காணவில்லை(படங்களை).




~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாராவது பார்க்க விரும்புபவர்கள் வாருங்கள்..... அழைத்துச் சென்று காட்டலாம்.... அழகான மலைத்தொடர்களிடையேதான் அமைந்திருக்கிறது..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பின் இணைப்பு:


காதல் என்பது???

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மணிக் கணக்காகப்
பேசிக்கொண்டிருப்பது..
விஷயமே இல்லாமல்...

19 comments :

  1. அருமையான போட்டோஸ் அதிரா! நானும் இப்படியான படங்கள் விரும்பி எடுப்பேன்... வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை...

    ReplyDelete
  2. super fotos, அந்தமானில் இருக்கும் “காலா பானி” என்ற செல்லுலர் சிறைசாலையையும், “பட்டாம்பூச்சி” திரைப்படத்தையும் நினைவு படுத்துகிறது.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. அழகிய காணக்கிடைக்காத படங்கள்..அரிய தகவல்கள்..அதிராவுக்கு நன்றி

    ReplyDelete
  4. அப்ப இந்த மாதிரி பழைய ஜெயிலை பார்த்து ரொம்ப வருடம் ஆகிறது, படங்கள் எல்லாம் அழகோ அழகு. கீழே உள்ள காதல் பூஸாக்கள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    அது மெத்துன்னு சேர்ந்து உட்கார்ந்து இருப்பதை சொல்ல வார்த்தைகள் இல்லை.

    எனக்கு நிறைய இந்த பூஸா கதைகள் இருக்கு

    ReplyDelete
  5. படங்கள் ரொம்ப அழகா இருக்கு. கம்பிக்கு பின்னாடி இருக்கிற பூஸைப் பார்த்தா ஏனோ அதிரா ஞாபகம் வருது:-(

    ReplyDelete
  6. மிக்க நன்றி இலா. இவை நான் எடுத்த படங்கள் அல்ல, நான் எடுத்தவை எந்த file இல் இருக்கெனக் கண்டுபிடிக்க முடியாமல் போச்சு.

    ReplyDelete
  7. மிக்க நன்றி ஹைஷ் அண்ணன், எல்லாம் இக்கரைக்கு அக்கரை ”மஞ்சள்” தான்... நீங்கள் அந்தமான் பார்த்திட்டீங்கள்... எனக்கு அந்தப்படம் பார்த்ததிலிருந்து.. சரியான ஆசை, அந்தமானை நேரில் பார்க்கவேணுமென்று...

    பட்டாம்பூச்சிப் படமோ? எனக்குத் தெரியாதே.. அதிலும் இப்படிக் காட்சிகள் வருதோ?

    ReplyDelete
  8. 'பூஸா' என்றதும் பழைய சில நினைவுகள் அதிரா. என் மருமகள் கதைக்கத் தொடங்கின வயசில 'பிள்ளைட அப்பா எங்க?' எண்டு யாரும் கேட்டால் 'பூஸா' எண்டுவா. உண்மைலேயே அப்ப அங்கதான் இருந்தார். அதெல்லாம் நினைக்கக் கூடாது, மறக்கவும் கூடாது. ;(

    ஹைஷ்,
    நீங்க 'பட்டாம்பூச்சி', 'கை இல்லாத பொம்மை' காலத்து ஆள் எண்டு எப்பவோ கவனிச்சன். ;) இப்ப திரும்ப வாசிக்க ஆசையா இருக்கு. எங்க புத்தகம் கிடைக்கும் எண்டு சொல்லுங்கோ.
    அப்ப, அப்பப்ப குமுதம் மிஸ் ஆகிரும். எல்லா அத்தியாயமும் படிக்கேல்ல. ஆனால் கிடச்ச வரை புத்தகமாக் கட்டி வச்சு இருந்தன், ஊரில.

    சுஜாதா எழுத்தும் ஜெயராஜ் ஓவியமும் இன்னும் அப்பிடியே நினைவு இருக்கு. (ஒருவகையில் இப்ப வண்ணத்துப்பூச்சிக்குப் பின்னால அலையுறதுக்கும் அதுதான் ஆரம்பம். ;) )
    ஹென்றி ச்சாரியரின் அந்தக் கதையில எத்தனை அனுபவங்கள், எவ்வளவு விஷயங்கள் சொல்லுப்பட்டு இருந்துது!! அந்த இடத்துக்கே கூட்டிப் போயிருவாங்கள் இரண்டு பேரும். எங்க கிடைக்கும் எண்டு மறக்காமல்சொல்லுங்கோ.

    ReplyDelete
  9. அன்பு சகோதரி இமா: நான் “பட்டாம் பூச்சி” “கையில்லாத பொம்மை” காலத்து ஆள் இல்லை, இவைகள் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்த புத்தகங்கள். என் சித்தி தவறாமல் இவைகள் படித்து முடித்ததும் என் தாத்தாவிடம் கொடுத்து பைண்டிங் செய்து ஒரு நூலகம் போல் வைத்து இருந்தார். குமுதத்தில் வந்த அனைத்து தொடர்கதைகளும், நல்ல சிறுகதைகளும் அந்த நூலகத்தில் இருக்கும். நான் பெரியவனாகி கதைப் படிக்கும் காலத்தில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் வரும் போது படித்தவைகளில் மனத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவைகளில் சில.

    காலபோக்கிலும், வாழ்க்கை சக்கரத்தின் சுழற்சியிலும் அந்த நூலகமே தற்சமயம் காணாமல் போய்விட்டது.

    அதன் பிறகு அதே கதையை “பாப்பியான்” என்ற ஆங்கில திரைப்படமாக பார்த்தபோது அவ்வளவு தத்ரூபமாக படம் எடுத்து இருந்தார்கள். (ஆஸ்கர் அவார்ட் வாங்கிய படம் என நினைக்கிறேன்)

    அடுத்த விடுமுறையில் போகும் போது மீண்டும் தேடி பார்க்கிறேன்.

    அம்மாவை கேட்டதாக சொல்லவும்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  10. பூஸா விலிருந்து ஒரு காதல்.

    சம்பவமும் கவிதையும் உணர்வுமிக்கது.
    படங்கள் ரசிக்கத்தக்கது.

    கவிதையில்

    //சந்ததியை
    வளர்க்க விரும்பும்
    பெற்றோருக்கு
    இவன் என்றும்
    வில்லனாக
    இருக்க மாட்டான்!!//

    இந்த இடம் வேறு எதையோ சொல்கிறதே!
    விளங்குது ஆனால் விளங்கேல்லை.

    பகிர்வுக்கு நன்றி அதிரா.

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  11. ஸாதிகா அக்கா, ஜலீலாக்கா.. மிக்க நன்றி. ஸாதிகா அக்கா பூஸா... வை உங்களுக்குப் பிடிக்கவில்லையோ? ஐ மீன் பூனையாரை?).

    ஜலீலாக்கா.. மெத்து மெத்தென இருப்பதில் சாந்து நிறப்பூஸாரை வடிவா உத்துப்பாருங்கோ.. கிட்ட கிட்ட... இன்னும்... தெரியுதா? இப்ப தெரியுதா????

    பூஸ் கதைகள் இருப்பின் உங்கள் புளொக்கில் எழுதலாமே.. படிக்க நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  12. செல்வியக்கா நல்வரவு... வெல்கம், மியா ஒரா.

    தப்பா நினச்சிடாதீங்கோ... இமா கிளி வளர்த்தவவாமெல்லோ அதுதான் அவ ”கியா ஒரா” சொல்லுறாவாக்கும் என நினைத்து, நான் மியா வளர்த்தேன்... சோ... மியா ஒரா... சரிதானே?.

    வந்ததுதான் வந்தீங்க... அதிரா வாழ்க ,, வளர்க(உடம்பால் அல்ல) என வாயார... மன்னிக்கவும் கையார வாழ்த்தாமல் அதென்ன கம்பிக்கு பின்னால நிற்பவரின் கதை... அவரை வடிவா... உத்துப்பருங்கோ.. கிட்ட இன்னும்... தெரியுதோ?... தெரியுதோ? தெரிஞ்சிருக்கோணுமே...:).

    மிக்க நன்றி செல்வியக்கா.

    ReplyDelete
  13. இமா, இளமதி மிக்க நன்றி.

    இமா பூஸா(பூனை) என்றால் அப்பவும், இப்பவும், எப்பவும் மறக்க முடியாதுதானே?.

    உங்கள் “ஹாய்” க்கு, பழம்... மன்னிக்கவும் பதில் வந்துவிட்டதுபோல இருக்கு...

    ஏன் இமா வண்ணாத்துப்பூச்சிக்க்குப் பின்னால அலையுறீங்கள்... ஏதும்.. அப்படி இருக்குமோ?

    புத்தகம் பற்றிக் கேட்டீங்கள்... கொஞ்சம் பொறுங்கோ... பிறகு, விளக்கமாக ஹைஷ் அண்ணன் பதில் தருவார்... அவர் எப்பவும் உப்படித்தான் உடனே சொல்ல....... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்...

    சுஜாதாவின் கதைகள் என்றால் சொல்லுங்கோ இமா, எனக்கு நன்கு தெரிந்த சுஜாதாவின் பிரியர் “ஒருவர்” இருக்கிறார், அவரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.

    இளமதி வாங்கோ... ஏன் அடிக்கடி காணாமல் போகிறீங்கள்? எங்கட.... ...... மாதிரி?.. சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்!!!

    இந்த இடம் வேறு எதையோ சொல்கிறதே!
    விளங்குது ஆனால் விளங்கேல்லை/// உது இப்ப விளங்காது... போகப்போகத்தான் விளங்கும்.. எண்டு பூனை சொல்லச்சொன்னது... குழப்பிட்டேனோ? இல்லை குழம்பிட்டீங்களோ?

    நேரம் சரிவராததால் உடன் பதில் தர முடியவில்லை எல்லோருக்கும்.. மன்னிக்கவும்..

    ReplyDelete
  14. ஹைஷ் அண்ணன்... சூசூஊஊஊஊஊடானமாதிரித் தெரியுது... றிலாக்ஸ் ஹைஷ் அண்ணன் றிலாக்ஸ்.. உங்களைப்பார்த்து அந்தக்காலமோ:) எனக் கேட்டால் ஆருக்குத்தான் கோபம் வராது... ஒரு வேளை அந்த நிழலைப்பார்த்துவிட்டுத்தான்.....அப்படிக் கேட்... கடவுளே என் வாய்தான் எனக்கு எதிரியே.... அதிரா எஸ்கேப்.....

    ReplyDelete
  15. அதீஸ், ஹைஷ் மற்றும் அனைவருக்கும்,

    'பட்டாம்பூச்சி எழுதியது ரா. கி. ரங்கராஜன், ஸ்ரீரங்கத்து ரங்கராஜன் இல்லை,' என்று எனக்கு நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து ஒரு மெய்ல் வந்திருக்கு. ;)

    தவறுக்கு வருந்துகிறேன்.

    எங்க, எப்பிடிக் குழம்பினனான் என்று தெரியேல்ல. ஆனால் நான் எழுதினதைப் பார்த்து மற்ற யாரும் குழம்பிரக் கூடாது எண்டு அவசரமா வந்து பதிவு போடுறன். ;)

    திரும்ப நாளைக் காலை வருகிறேன். அதுவரை 'நல்லிரவு'. ;)

    ReplyDelete
  16. அன்பு சகோதரி இமா: உங்களுக்காக தேடி எடுத்தது

    http://books.dinamalar.com/BookView.aspx?id=5911

    பட்டாம் பூச்சி புத்தகம் கிடைக்கும் இடம்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  17. இமா, கரெக்ட்!! அது ராகி ரங்கராஜனேதானாம்.... நான் எழுதவில்லை.. என்னை விட்டுவிடுங்கோ அதிரா எஸ்கேப்.....

    ஹைஷ் அண்ணன்... பயங்கர ஸ்பீட்டாக இருக்கிறீங்கள்... அப்போ நீங்கள் அந்தக்காலத்து ஆள் இல்ல...... தான்... ஆங்.........அதிரா எஸ்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ...

    ReplyDelete
  18. அதிரா.. அண்ணன் நல்ல பிள்ளையாக இருக்கிறார்.. விருப்பமில்லைன்னு தெரிந்ததும் விலகியது அவர் மீது மரியாதையைக் கூட்டுகிறது.. விடுதலையாகிட்டாரா?

    இமா.. உங்க வரிகள் வலிக்க வைக்குது..

    ReplyDelete
  19. சந்தனா, அந்த அண்ணனைபற்றி பின்னர் நான் விசாரிக்கவில்லை. எனக்குத் தேவையானதைமட்டும் பொறுக்கினேன். விடுதலையாகியிருப்பார் என நம்புகிறேன். ஏனெனில் இன்னர் நிறையப்பேரை பஸ்ஸிலே கொண்டுவந்து இறக்கிவிட்டதாக அறிந்தேன்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.