என்ன இது கேள்விக்குப் பதில் எழுதச் சொன்னால்ல்.. பட்டிப் பொங்கல் பொங்கப் போறாவாம் எனத்தானே அடிக்க வாறீங்க? :) வெயிட் வெயிட்... :)
தைப்பொங்கல் எல்லா வீட்டிலும் ஜனவரி 14 இல்தானே வரும் பொதுவா, அன்று எல்லோர் வீட்டிலும் பொங்குவார்கள்.. இனிப்பு சாப்பிட்டு அலுத்துவிடும்:).. உறைப்பா ஏதும் கிடைக்குமா என தேடுவோம்.. ஆனா பின்பு பட்டிப் பொங்கல் அருமையா சில வீடுகளில்தானே பொங்குவினம்.. அப்போ சாப்பிட ஆசையா இருக்குமெல்லோ.. உடனேயே பானை காலியாகிடும்:).. இப்போ புரிஞ்சிருக்குமே அதிரா ஏன் டிலே பண்ணினேன் போஸ்ட் போட என:))..(ஸ்ஸ்ஸ்ஸ் எப்பூடியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு:)) சரி இதுக்கு மேல வாணாம்ம் விஷயத்துக்கு வாறன்.
ஒவ்வொரு வீட்டுக்கும் போய் இந்தப் பத்துக் கேள்விக்குமான பதிலுக்கு.. எவ்வளவு வெடி வைக்க முடியுமோ அவ்வளவு வச்சிட்டேன்:)... இப்போ அவ்வளவும் திரும்பி வருமெல்லோ:) எறிஞ்ச பந்து திரும்பி வரும்தானே? அதனால உள்ளால உதறினாலும், காட்டிக்கொள்ளாமல்.. ஸ்ரெடியாகிக்கொண்டு தொடர்கிறேன்.
போனகிழமை இளமதி, வேலிக்கு மேலால கூப்பிட்டுச் சொன்னா.. “அதிரா இஞ்சபாருங்கோ.. இதைத்தொடருங்கோ” என:).. சரி இதென்ன எத்தனையோ கேள்விக்கு பட்டுப்பட்டென பதில் சொல்லுவன் இதெல்லாம் பெரிய விஷயமோ என நினைச்சு டக்கென ஓம் தொடர்றனே எனச் சொல்லிட்டேன்ன்:).
இப்போ என்ன பண்ணுவது? பதில் சொல்லித்தான் ஆகோணும். அதுக்குத்தான் அம்மம்மா சொல்றவ வாக்கு கொடுக்காதே, கொடுத்திட்டால் மீறாதே என.. சரி சரி எங்கிட்டயேவா?:).
==================================()()()()()===================================
1.உங்கள் 100 வது பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் வீட்டோடு கொண்டாடுவதுண்டு. கொஞ்சம் பெரிதாகக் கொண்டாடியது கீ பேர்த்டே. ஆனா என் பிறந்தநாளை நானே (எனக்கு நானே) கொண்டாட விரும்பமாட்டேன். அன்று இருந்தால் சுய அறிவோடும், மன மகிழ்ச்சியோடும், எந்த இழப்பும் இல்லாமல் இருக்கோணும்.. அப்போ குழந்தைகள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கு, ஏதும் பரிசு கொடுத்து மகிழ்விக்க விருப்பம்.
“நேற்று என்பது அனுபவம், நாளை என்பது நம்பிக்கை, இன்று என்பது ஒன்றிலிருந்து ஒன்றிற்கு மிகத் திறமையுடன் செல்வது”
“நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தவர் எவர்?, நினைப்பவர்தான் நீ.. முடிப்பவர் அவர் (இறைவன்)”.
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புறீர்கள்?
எதைப் பார்த்தாலும் கற்றுக்கொள்ள விருப்பம். எந்தக் கைவேலை ஆகட்டும், எந்த சமையல் குறிப்பாகட்டும், தையலாகட்டும்.. தோட்டச் செடி வளர்ப்பாகட்டும்... கண்ணில் படுவதெல்லாம் கற்க விருப்பம்.. பாஷை(வேற்று மொழி) படிக்க மட்டும் பிடிப்பதில்லை:).
கண்ணதாசன் சொல்லியிருக்கிறார், மனித மனம் பொதுவாக எதைப் பார்த்தாலும் அது நானாக இருக்கக்கூடாதா என எண்ணுமாம், அப்படித்தான் நானும் எதைப் பார்த்தாலும், நானும் அதைக் கற்றுக்கொண்டால் என்ன என எண்ணுவேன்.
“வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விடயம், விரும்புகிறமாதிரி சிலவற்றை விட்டுக் கொடுக்கவும் வேண்டும் என்பது”
3. கடைசியாக சிரித்தது எப்போ? எதற்காக?
இதுக்கு எப்படி நான் பதில் சொல்வேன்? :), ஏனெனில் உர்ர்ர்ர் என்றால் அழுவேன்ன்:) உஸ்ஸ் என்றால் சிரிப்பேன் அதுதான் நான்:). பெரும்பாலும் சிரித்துக் கொண்டே இருப்பேன். சமீபத்தில் சிரி சிரி எனச் சிரித்து கண்ணால் நீர் வழிந்தோடியது... “நடுவில கொஞ்சம் டிஸ்ரேப் பண்ணுவோம்” நிகழ்ச்சி ஒன்று பார்த்து.
நாம் தான் மகிழ்ச்சியைத் தேடி, மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
“பல்லிதான் பூச்சியை நோக்கிப் போகும், பூச்சி எங்காவது பல்லியைத் தேடிச் செல்லுமோ?”:)
4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
இது வெளிநாட்டில் வாழ்வோருக்கு பொருத்தமான கேள்வியாக இருக்காது. ஏனெனில் இங்கு மின்சாரம் இல்லையெனில் நினைத்துப் பார்ப்பதே கஸ்டம்.. இருப்பினும் கற்பனையில் என் பதில், இரவெனில் எல்லோரும் கையிலிருக்கும் கருவிகளை எல்லாம்:) வைத்து விட்டு, ஒன்றுகூடி கதைச்சு சிரிக்க நல்ல நேரம். மெழுகுவர்த்தி ஒளியைக் காட்டி, பிள்ளைகளுக்கும், ஊரில் இப்படியும் இருந்திருக்கிறோம் என புரிய வைக்கலாம். பகல் பொழுதாயின், அதுவும் கோடை காலமெனில் வெளியில் கார்டினில்.. அல்லது வோக் போகலாம். வின்ரர் எனில் மோல் போகலாம், அல்லது வீட்டில் கைவேலை, செய்ய பிடிக்கும்.. புத்தகம் படிக்க பிடிக்கும். மாத்தி மாத்தி உடுப்புப் போட்டுப் பார்ப்பது பிடிக்கும்.
“நித்தம் பட்டினி கிடந்தவருக்குப் பசி தெரியாது, ஆனா மூன்று வேளையும் தவறாமல் சாப்பிட்டுப் பழகியவர், ஒரு வேளைகூடப் பசி தாங்க மாட்டார்”
“மீனின்றி நீர் வாழும்.. ஆனா நீரின்றி மீன் வாழாது”
5.உங்களுடைய குழந்தையின் திருமணநாள் அன்று
அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
இனி இதுதான் உங்கள் குடும்பம், ஒருவரை ஒருவர் நம்பித்தான் மணவாழ்வில் இணைகிறீங்கள்.. இருவரும் ஒளிவுமறைவின்றி, விட்டுக்கொடுத்து சந்தோசமாக வாழுங்கோ. [இதுக்குமேல என்ன சொல்வது, அதிகம் பேசினால், அட்வைஸ் என வெறுப்பு வந்துவிடுமெல்லோ அவர்களுக்கு:))]
“இல்லறம் ஒரு மகா சமுத்திரம், கணவன் அதில் கப்பல், மனைவி அதில் கலங்கரை விளக்கம், பிள்ளைகள் பயணிகள். நல்ல கலங்கரை விளக்கும், பழுதற்ற கப்பலும் இருந்தால், பயணம் சுகமானதே”
“ஒருவர் சுமையை இன்னொருவர் வாங்கிக் கொள்கிற மனப் பக்குவம்தான், மண வாழ்க்கையின் உயிர் நாடி”
6.உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க
முடியுமென்றால் எந்த பிரச்சனையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள்.?
முதல்ல உலகில் இருக்கும் எலிகளை ஒழிக்கோணும்:)..
இல்ல உண்மையில் யாருக்குமே வாழ்வில் துன்பம் வராமல் எவ்வகையிலும் மகிழ்ச்சியாக இருக்க வைக்கலாம் என, மனிதருக்கு ஏற்படும் தேவையற்ற துன்பங்களைப் போக்க வழிபண்ணுவேன். பிரசங்கங்கள் நடாத்துவேன்:).
“வாழ்க்கை வாழ்வதற்கே”.
7.உங்களுக்கு ஒரு பிரச்சனை அதை தீர்க்க யாரிடம் அட்வைஸ்
கேட்க விரும்புவீர்கள்.?
இதுவரை என் கணவரிடம்தான் ஆலோசனை பெற்றிருக்கிறேன். எப்பவும் என்னால் முடிவெடுக்க முடியும், நான் எடுக்கும் முடிவு சரியானதே என எண்ண மாட்டேன். ஏதும் பொதுவான ஆலோசனை தேவை எனில் அடுத்து அப்பா, அம்மா வை கேட்டிருக்கிறேன்... அதையும் மீறினால் அண்ணன், அக்கா.. .
நான் சின்ன வயதிலிருந்தே அட்வைஸ் கேட்டு வளர்ந்தேன்ன். இது பற்றிய என் பதிவொன்று இங்கிருக்கு.. விரும்பினால் படியுங்கோ..
அப்பாவின் அட்வைஸ்
ஆனா மாறாக யார் அட்வைஸ் பண்ணினால் ஏற்றுக் கொள்வீர்கள் எனக் கேள்வி அமைந்திருந்தால்.. என் பதில்:-
ஒரு வயதுக் குழந்தையானால்கூட செவிமடுப்பேன். எனக்குத்தான் அனுபவம் அதிகம் என்றெல்லாம் எண்ண மாட்டேன், சில நேரங்களில் பிள்ளைகள் சின்னவர்கள் எனினும்.. நல்ல கருத்துக்கள் சொல்வார்கள்.
எல்லோரின் அட்வைசையும் செவி மடுப்பேன், முடிவு என் சொந்த புத்தி கலந்ததாக இருக்கும்.
“யாரிடம் வேண்டுமானாலும் ஆலோசனை கேள், ஆனா முடிவு உன்னுடையதாக இருக்கட்டும்”
8.உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார்.
அதைக் கேள்விப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
இல்லாத ஒரு கதையைப் பரப்பும்போது, மனம் வேதனைப் படும், கவலையாகத்தான் இருக்கும். சண்டைக்கெல்லாம் போகவே போக மாட்டேன்.. இக்னோர்தான்..
என் ஃபிரெண்டுக்குத்தான் அனைத்தையும் சொல்லி, நீயே கேட்டுக்கொள் என விட்டுவிடுவேன்ன்... கடவுளைச் சொன்னேன்.
“பிறருடைய குறைகளிலே நாட்டம் கொண்டவராய் எப்போதும் அடுத்தவரைப் புறம் கூறிக்கொண்டே இருப்பவர், தன் குறைகளைத்தான் வளர விடுகிறார்”.
Successful people always carry two things:-
~smile to solve problems~
~silence to avoid problems~.
9.உங்கள் நண்பரின் மனைவி இறந்துவிட்டால்,அவரிடம் என்ன சொல்வீர்கள்?
இழப்பு என ஒருவருக்கு ஏற்படும்போது, முதலில் அவர்களுக்கு தேவைப்படுவது ஆறுதல்தான். அவரை நிறைய பேச, அழ விட்டுக் கேட்டுக் கொண்டிருப்பேன், அப்போ அவரது மனப்பாரம் கொஞ்சமாவது குறையும். நிறைய அலட்டாமல்.. கொஞ்சம் கொஞ்சம் ஆறுதல் கதைகள் சொல்வேன்.
யாருக்கும் வாழ்க்கை நிரந்தரமில்லை, நாம் எல்லோரும் ரெயினில் போகும் பயணிகளே.. , அவரவருக்கு எந்த ஸ்டேசனோ அதில் இறங்குகிறோம் அவ்வளவுதான். இன்று நீ., நாளை நாம் இதுதான் வாழ்க்கை. இன்று நித்திரையாகிறோம், நாளை எழும்புவோமா என்பது நம் கையில் இல்லை, இன்றைய நாள் என்பது ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கும் ஒரு ஹிஃப்ட், அதனால் வருங்காலம் என பெரிதாக எல்லாம் எண்ணி வருந்தாமல், இன்று மட்டும் நடக்கப் போவதை நினைப்போம்.
“அழுவதன் மூலம் தடுக்கக் கூடியது ஏதுமில்லை, சிரிப்பதன் மூலம் அடையக்கூடியது ஏதுமில்லை, துடிப்பதன் மூலம் எந்தப் பரிகாரமும் கிடைப்பதில்லை”
“விதி தவறாக இருக்குமேயானால், தெய்வம் கண்களை மூடிக் கொள்ளும், அதற்காக அழுது பலனில்லை”.
10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீங்க.?
எனக்கு இடைக்கிடை தனிமையும் பிடிக்கும். அப்போது நல்ல சத்தமாக பாட்டுப் போட்டுக் கேட்பேன். ஃபோனில் ஹேம் விளையாடுவேன். வீட்டில் ஏதும் வேலை இருப்பின் செய்வேன்.. அதாவது எல்லோரும் வீட்டில் இருக்கும்போது அவர்களோடு நேரம் செலவளிப்பதையே அதிகம் விரும்புவேன். அதனால் தனிமை கிடைக்கும்போது ஓடி ஆடிச் செய்யும் வேலைகளை முடிக்கப் பார்ப்பேன்.
சாறி உடுப்பேன், நீண்ட நாள் பாவிக்காமல் அடுக்கியிருக்கும் உடுப்புகளை மாற்றி மாற்றிப் போட்டு கண்ணாடியில் பார்ப்பேன்:).
“எப்பவுமே அமைதியாய் இரு, எல்லாம் இருந்தும் அமைதியாய் இருக்கும் நூலகத்தைப்போல” :).
=============================================================================
போன தடவை நிறையப்பேர் வோட் பண்ணாமல் தப்பிப் போயிட்டினம்.. அதனால அதிராவோ கொக்கோ.. இம்முறை பெரிய கமெரா பூட்டியிருக்கிறேன்ன்.. வோட் பண்ணாமல் போவோரைப் பிடிச்சிடுவேன் எப்படியும், எங்கிட்டயேவா?:)..
தொடருக்கு என்னை அழைத்த இளமதிக்கு நன்றி..
================================================================================
|
Tweet |
|
|||