நல்வரவு_()_


Saturday 13 March 2010

தாத்தாவின் நினைவுகள்......



இது முழுக்க முழுக்க என் கற்பனையில் உருவான கதை...........

சொன்னான்! என் ‏நண்பன் கார்த்திகேசு அப்பவே சொன்னா‫‫‪ன், "சிவநாதா, வெளிநாடு குளிர் அதிகமாமே! உன்னால் தாங்க முடியுமா?" என்று. எனக்கும் அது தெரிந்திருந்தது, இருப்பினும் என் மகனின் வார்த்தைகளை என்னால் தட்ட முடியவில்லை. மகனதும் மருமகளதும் அன்பான அழைப்பை ஏற்று, இங்கு, இந்தக் குளிர்நாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டேன்.


என் கிராமத்து நாச்சார் வீட்டில், குளிர்காலமானால் நான் எங்கேயும் வெளியே செல்வதில்லை, அந்தப் பக்கத்துப் பிள்ளையாரை எட்டிப் பார்ப்பதோடு சரி. வீட்டுத் திண்ணையிலுள்ள அந்த சாய்மனைக் கதிரையில் தான், என் பொழுது கழியும். அதிலும் என் மனைவி, மீனாட்சி இறந்ததிலிருந்து, நான் எங்கேயும் போவதில்லை. பிள்ளையாரிடம் போவதோடு சரி.

மீனாட்சி காலமானதன் பின், நான் தனியேதான் அக்கிராமத்து வீட்டிலிருந்தேன். ஆனால், தனிமை என்பதை நான் என்றுமே உணர்ந்ததில்லை. என் பொழுது முழுக்க, அத் திண்ணையிலேயே கழியும். ஏதாவது தேவைக்கு மட்டும்வீட்டினுள் சென்று வருவேன். திண்ணையிலேயே கட்டிலும் இருந்தது.

சமைப்பதற்கு, வீட்டைச் சுத்தம் செய்வதற்கென்று "சரசு" என்ற பிள்ளை வருவாள். தெருவால் போவோர் வருவோர் எல்லாம், வேலிக்கு மேலால் எட்டிப் பார்த்து, நான் இருப்பது தெரிந்தால், " என்னையா? எப்படி இருக்கிறீங்கள்? என ஒரு எட்டு வந்திருந்து கதைத்துவிட்டுப் போவார்கள். குசினி வாசலில் நிற்கும் நாவல் மரமும், முன் படலையுடன் நிற்கும் நெல்லி மரமும் காய்க்கத் தொடங்கிவிட்டால் போதும், அந்த அயல் குழந்தைகள் எல்லாம், எங்கள் வீட்டில்தான் நிற்பார்கள். மீனாட்சி இருந்த காலத்திலும் சரி, பின்னரும் சரி, மீனாட்சியோ நானோ, யாரையும் தடுத்ததில்லை. அதனால் எங்கள் வீட்டில் எப்பவும் தனிமை ஏற்பட்டதில்லை.


இப்பொழுதுதான், தனிமை என்பதை உணர்கிறேன். இங்கு காலையில், எட்டு முப்பது மணிக்கு எல்லோரும் புறப்பட்டு விடுவார்கள், பின்னேரம் நான்கு மணிக்கே திரும்புவார்கள். அதுவரை நான், வீட்டில் தனிமையிலேயே இருப்பேன். என் மகன், எனக்கு பொழுது போவதற்காக சகல வசதியும் செய்துதான் தந்திருக்கிறார், தமிழ் தொலைக்காட்சி, புத்தகங்கள், பேப்பர் என நிறைய வசதி செய்து தந்திருக்கிறார்கள். ஏதோ அந்தக் காலத்தில் படித்து வைத்த படிப்பு, இப்போ பேப்பர் படிக்க உதவுகிறது.


காலையில், எல்லோரும் போன பின்னர், பூட்டிய வீட்டினுள், "ஜெயில் வாழ்க்கை" என்பார்களே!, அதனை இப்போதுதான் நான் உணர்கிறேன். நான் விடும் மூச்சு எனக்குக் கேட்கிறது. அந்தளவு அமைதி. கதவு, ஜன்னல் எல்லாம் எப்பவுமே பூட்டியபடியேதான் இருக்கும். திறந்தால் குளிர் வந்துவிடுமாம். வெளியில் ரோட்டால் கார்போவது, கண்ணால் பார்த்தால்தான் தெரியும். சத்தம் எதுவுமே வீட்டினுள் கேட்காது.

எனது மருமகள், பார்த்துப் பார்த்து எனக்கு எல்லாம் செய்வார், மாலையில் சமைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுவார். மறுநாள், ஏதோ "மைக்குறோவேவ்" என்கிறார்கள் அதனுள் வைத்தால் ஒரு நிமிடத்தில் சூடாகிவிடும், சாப்பிட்டுவிடுவேன். ஆரம்பத்தில், எனக்கு இந்த உணவுகள் ஒத்துக்கொள்வதில்லை, காலப்போக்கில், இப்போ பழக்கமாகிவிட்டது.தேனீர்கூடப் போடப்பழகிவிட்டேன். என்னால் எவருக்கும் தொந்தரவு வரக்கூடாதென்றுதான் நான் எப்பவும் நினைப்பேன்.

மகன் என்னை இங்கு அழைக்கும்போதே நான் சொன்னேன், "தம்பி, இங்கே சமையலை, வீட்டைப் பார்த்துக்கொள்ள சரசு வந்து போகிறாள், எந்நேரமும் நண்பர்கள் வந்து போவார்கள், உறவினர்கள் வருவார்கள். இரவில்கூட இருவர் வந்து, இந்தத் திண்ணையில் படுப்பார்கள். நான் கதைத்துக்கொண்டே உறங்கிவிடுவேன், என்னைப்பற்றி நீ கவலைப்படாதே, வசதி வருகிறபோது ஒரு தடவை வந்து பார்த்துவிட்டுப்போ, எனக்கு இங்கு மீனாட்சி இல்லாதது தவிர, வேறு எந்தக் குறையும் இல்லை", என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். மகன் கேட்கவில்லை. உங்களை அங்கே தனியே விட்டுவிட்டு, என்னால் இங்கு நிம்மதியாக இருக்க முடியாதப்பா, குழந்தைகளும் கேட்கிறார்கள், என்று ஒரே பிடியாகக் கூப்பிட்டுவிட்டான்.

இங்கு குளிர்காலமானால், பக்கத்து வீட்டுக்காரரைக்காண்பதே, மாதத்தில் ஒருமுறை அல்லது இருதடவைகள்தான். அதுவும் வெளியில் போய்வருகிறபோது தப்பித்தவறிக் கண்டால்தான். ஆரம்பத்தில் என்னைப் பார்த்து "ஹலோ" என்றார்கள், நான் எதுவும் சொல்லவில்லை. பின்னர் மகன்தான் சொல்லித்தந்தான், யாராவது ஹலோ என்று சொன்னால், நீங்களும் திருப்பிச் சொல்லுங்கள், இல்லையெனில் உங்களுக்குப் பிடிக்கவில்லையோ என்று நினைப்பார்கள் என்று. அதிலிருந்து நானும் "ஹலோ" சொல்லப் பழகிக்கொண்டேன்.

இப்போ அவர்கள் சொல்ல முதலே, நான் சொல்லி விடுவேன். எங்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு நான்கு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது, அது என்னைப் பார்த்து "மிஸ்டர் சிவநாதன்" என்று அழைக்கும். முதலில் எனக்கு, இதென்ன ஒரு குழந்தை பெயர் சொல்கிறதே என்று ஒரு மாதிரித்தான் இருந்தது. ஊரில் என்றால் ஒரு வயது அதிகமானாலும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்களே. எமது கலாச்சாரம் வேறு, இவர்கள் கலாச்சரம் வேறு. எல்லாமே முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. இடத்திற்கேற்றபடி நாம்தான் எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும், என்று புரிந்துகொண்டேன்.

பகலில், நான் தனிய இருக்கிறேன் என்று, மகனும் மருமகளும் மாறி மாறிரெலிபோனில் விசாரித்துக் கொள்வார்கள். எனக்கும் "ரெலிபோன் காட்" என்று வாங்கித் தந்திருக்கிறார்கள். தனிய இருக்கிறபோது ஊருக்கு எடுத்துக் கதையுங்கள் என்று. ஊரில் கார்த்திகேசு வீட்டில் போன் இல்லை. கொமினிகேசனுக்கு இடையிடையே கூப்பிட்டுக் கதைத்துக் கொள்வேன். கார்த்திகேசு சொல்வான் "ஒழுங்கையால் போகிறபோது, உன் வீட்டுத் திண்ணையைப் பார்க்க, எனக்கு வயிறெரிகிறது" என்று. எனக்கும் நினைக்க கவலையாகத்தானிருக்கிறது. ஒருவேளை மீனாட்சி இருந்திருந்தால், நான் இங்கு வந்திருக்க மாட்டேன். அல்லது இருவருமாக வந்திருந்தால் பொழுதுபோவது தெரியாமல் கதைத்துக் கொண்டிருந்திருப்போம்.

மீனாட்சியும் நானும் எப்போதும் சண்டைப் பிடித்ததில்லை. அவளும் என்னிடம் அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொள்வாள். நானும் அன்பாக நண்பர்கள் போலவே பழகிவந்தேன். எங்கள் கிராமத்தில், எங்களைப்பற்றிச் சொல்லிக் கொள்வார்கள், தம்பதிகள் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும் என்று. அப்படி அன்பாகத்தான் இருந்தோம். திடீரென வந்த ஒரு காய்ச்சலால், யாராலும் மீனாட்சியைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

----------------தொடரும்....

======================================================

======================================================
இன்று பின் இணைப்பு:

வண்ணாத்துப் “பூஸ்”




======================================================
~~~வசந்தம் என்பது, வாழ்வில் ஒருமுறையேனும் வராமல் போகுமோ~~~
======================================================

22 comments :

  1. கதை நல்லா இருக்கு, முழுசா முடிஞ்சதும் பதிவு போடுகிறேன்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. தாத்தா கதை சூப்பர்.தாத்தாவே நேரில் வந்து கதைப்பதுபோல் உள்ளது அதிரா.தேறிட்டீங்க அதிரா.தொடகதையாக எழுதி அசத்துறீங்க.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வடிவாக எழுதுறீங்கள் அதிரா. வாசிக்க ஊர் நினைவு வருகிறது. எப்ப அடுத்த பாகம் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறன்.

    ReplyDelete
  4. அதிரா கதை அப்படியே உண்மை கதை போல் படிக்க படிக்க சுவாரஸ்யமா இருக்கு

    ReplyDelete
  5. ஹைஷ் அண்ணன்.. உடன் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. சொன்னபடி கதைமுடிவில் சொல்லிடவேணும்.. அப்பத்தானே எனக்குத் தெரியும் அடுத்த கதையையும் எழுதலாமோ அல்லது இத்தோடு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமோ என்று.

    ReplyDelete
  6. ஸாதிகா அக்கா... மனதில் தோன்றியதை எல்லாம் எழுத ஆரம்பித்தேன்... ஆனால் நிறைய எழுதாமல் முடித்துவிட்டேன். இன்னும் இரு பாகங்களே இருக்கு. மிக்க நன்றி.

    ReplyDelete
  7. இமா மிக்க நன்றி. நம்பமுடியவில்லை.. நான் மீண்டும் மீண்டும் பெயரைப் பார்த்திட்டேன் இமாவேதான். அதிராவோடு இம்முறை வம்புச்சண்டை ஏதும் போடவில்லையே... :). அடுத்தபாகம் விரைவில் வரும் ஆனால் இப்பாகம் மாதிரி இருக்குமோ தெரியவில்லை:(. படித்ததும் சொல்லுங்கோ.

    ReplyDelete
  8. ஆ... ஜலீலாக்கா மிக்க நன்றி. உங்கள் வேலைகள் மாமா மாமி வரவுகளுக்கு மத்தியிலும் வந்து பின்னூட்டம் தந்துவிட்டீங்கள்.

    ReplyDelete
  9. அதிரா சூப்பரா இருக்கு உங்க பக்கம்.கதைஆரம்பமே நன்றாக இருக்கு.கெதியில அடுத்தபாகத்தையும் போடுங்கோ.இமா சொன்னமாதிரி ஊருக்கு கூட்டிப்போகிறியள்.
    நான் எப்பவுமே உங்கட கட்சிதான்.இதை நான் முன்பே தெரியப்படுத்திவிட்டேன்.

    ReplyDelete
  10. அதிரா! எனக்கு இப்படிக்கதைகள் படித்தாலே மனசு கனக்கும்.... ஊரில் அம்மாவின் சிறிய தாயார் எனக்கு பாட்டி /தாத்தா இருவரும் இருக்கிறார்கள்...
    லெச்சிமி போன் பண்ணுச்சா.. தம்பி ( என் கணவர்) எப்படி இருக்கிறார் என்று விசாரிப்பார்கள்...

    சென்றமுறை ஊருக்கு போன போது தாத்தா புது வேட்டி கட்டி வந்திருந்தார் அப்போது எனது தங்கை ( சின்னம்மா மகள்) .. என்ன தாத்தா ... அக்கா வந்தா தான் புது வேட்டி போடுவியா என்று கிண்டல் செய்தது நினைவுக்கு வருது... எனக்காக முந்திரி சுட்டு உடைத்து கொடுத்தார்கள் தாத்தாவும் பாட்டியும் ... மீ கிரையிங் அதீஸ்!!!

    கண்டிநியூ ஸ்டோரி :((

    ReplyDelete
  11. நல்ல விவரிப்பு அதிரா. பெரியவரின் தனிமை உணர்வுகள் பிழிகின்றன.

    ReplyDelete
  12. அம்முலு.... நீங்களோ? எதிர்பாரா விருந்தினர்.. சந்தோஷமாக இருக்கு.. பழையவர்கள் தேடிவரும்போது மகிழ்ச்சிக்கு அளவேது? மிக்க நன்றி.

    என்னதூஊஊஊஉ? நீங்கள் என்ர கட்சியோ? மெதுவாகச் சொல்லுங்கோ.. இங்கே சனமெல்லாம் பாம்புக்கண்ணோடும் எலிக்காதோடும் திரியினம் கண்பட்டுப்போகும்...

    ReplyDelete
  13. இலா!!! தாத்தா இம்முறை நிறைய எழுதவச்சிட்டார். உணர்ச்சிவசப்பட்டு இடையில உ.பெ எல்லாம் சொல்லிட்டீங்க இலா. மிக்க நன்றி.

    உண்மைதான் ஊர் நினவு வந்தாலே துக்கம் தொண்டையை அடைக்கும். ஆனாலும் இலா, உங்களுக்கு ஊருக்கு போனால் பழைய நிலைமை கிடைக்கும்.அதை நினைத்து சந்தோஷப்படுங்கோ. எம்மைப்பொறுத்து, ஊரிலே மரத்தைவிட்டுப் பறவையெல்லாம் ஒவ்வொரு நாடுகளுக்குப் பறந்துவிட்டது.... மரம் மட்டும் வேறிச்சோடிப்போய்.. புதிய பறவைகளைச் சுமந்தபடி.....

    ReplyDelete
  14. திருமதி ஹூசைன் மிக்க நன்றி. உண்மைதான் வெளிநாட்டில் இருக்கும், பல, வயதானோரின் உண்மை நிலை இதுதான். அதை மனதில் வைத்தே இக்கதையை ஆரம்பித்தேன்.

    ReplyDelete
  15. சிங்கப்பூர் பயணம் முடித்து இன்றுதான் வந்தேன் அதிரா! வந்ததும் உங்கல் தாத்தா கதையைப் படித்து மனம் கனத்து விட்டது.
    அதிரா வெளிநாடு வரும் பெற்றோரின் நிலையை அப்படியே சொல்லிட்டீங்க! என்னதான் நாம் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டாலும் அவர்களது தனிமை உணர்வை மாற்றுவது கடினம்தான். பள்ளிக்கு செல்லாத பேரன் பேத்திகள் வீட்டில் இருந்தால் தனிமைன்னா என்னன்னு கேட்பாங்க. அவர்களுக்கு ஒருநாளுக்கு 24மணிநேரம் போதாது.

    ReplyDelete
  16. அதிரா, கதை எல்லாம் எழுதி ஒரே ஆரவாரமாக இருக்கு. கதை முடிந்த பின்னர்தான் கருத்து சொல்வேன். கெதியா முடியுங்கோ.

    கூட்டு குடும்பத்தில் ஒரே குடைச்சல். அது தான் தனிக்குடித்தனம் போய் விட்டேன். புதுமனை குடிபுகு விழாவுக்கு உங்களை கூப்பிடாதது பிழை தான். என் பக்கமும் வாங்கோ.
    http://vanathys.blogspot.com/

    ReplyDelete
  17. கவிசிவா... அடிக்கடி சிங்கப்பூர் போறீங்கள்? அங்குதான் சொப்பிங் எல்லாம் செய்வீங்களோ? மிக்க நன்றி.

    ReplyDelete
  18. வானதி வாங்கோ... இது இப்பூடி சொல்லிட்டீங்க... தாத்தாவின் நினைவுகளெல்லோ... அதிராமாதிரி ஸ்பீட்டா இருக்காதெல்லோ?:). எதுக்கும் கெதியா முடிக்கச்சொல்லிச் சொல்லிவிடுகிறேன் தாத்தாவிடம்.

    ஓ... கூட்டுக்குடும்பம்.. இப்ப தனிக்குடித்தனம்... இதோ வருகிறேன்... அழையாவிட்டால் எனக்கெப்பூடித் தெரியும்?? தனிக்குடித்தனத்தில் பயப்படத்தேவையில்லை... கூட்டுக்குடும்பம் என்றால் எப்ப என்னாகும் என ஆண்டவனுக்குத்தான் தெரியும்.. மிக்க நன்றி வாணி...

    ReplyDelete
  19. எப்பூடி?இப்படியெலலாம் எழுதுறீங்க? நாங்க கேட்க வேண்டியது.நான் நிறைய பார்க்க வேண்டியது இருக்கே,இந்த என் பக்கம் ஏன் என் நினைவிற்கு வரமாட்டேங்குது?ஆண்டவா!

    ReplyDelete
  20. ஐ..தாத்தா கத..நல்லார்க்கு அதிராக்கா..ஜீனோ லைக்ஸ் தாத்தாஸ் நேம். கண்டினியூ ப்ளீஸ்.

    அப்டியே நைசா ஜீன்ஸ் காதுல சொல்லுங்கோ,இலாக்கா புனை பேர் வைச்சிருக்காங்களா? மக்கள்ஸ் நீங்கல்லாம் இந்த பின்னூட்டத்த படிக்க கூடாது,அதிராக்கா சீகிரம்படிச்சிட்டு கியிச்சுடுங்கோ,ஓக்கை? ;)

    ReplyDelete
  21. மிக்க நன்றி ஆசியா. ஆண்டவா “என்பக்கத்தை” ஆசியாவின் மெமரிக்கு அடிக்கடி கொண்டுவாப்பா.

    ReplyDelete
  22. மிக்க நன்றி ஜீனோ. படிச்சதும் கிழிச்சுட்டேன்... அதுதான் பதிபோட தாமதம். தாத்தாவின் பெயருக்கும் ஜீனோக்கும் சம்பந்தம் இருக்கோ? சும்மாதான் கேட்டேன்.. கர்ர்ர்ர் வேண்டாம்:)

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.