நல்வரவு_()_


Wednesday, 23 February 2011

"என் மாமா"


கூக்குரலாலே கிடைக்காது
அந்த கோட்டைக்குள் நுழைந்தால் திரும்பாது....


சமீபத்திலே(போன வருடம்) என் மாமா(கணவரின் அப்பா) இறைவனடி சேர்ந்துவிட்டார். அப்போ தொடக்கம் அவர் பற்றி ஒரு பதிவு எழுத நினைத்து எழுதி முடியுதே இல்லை. மனதிலே இருக்கும் அனைத்தையும் எழுத்தில் வடிக்க முடியாவிட்டாலும் ஏதோ என்னால் முடிந்ததை எழுதிடவேணும் என நினைக்கிறேன்.

எப்படி ஆரம்பிப்பது எப்படி எழுதுவதென்றே தெரியவில்லை. முதலில் அவர்பற்றி ... மாமாவுக்கு ஸ்கொட்லாந்தின் எடின்பறோ மெடிகல் கொலீஜ்சிலே அந்நாளில் இடம் கிடைத்தது, அவர்தான் குடும்பத்தில் மூத்தமகன் என்பதால், வீட்டிலே போகவேண்டாம் என ஒப்பாரி .. அந்நாளில் வெளிநாடென்பது... ஏதோ இல்லாமல்போவதற்குச் சமனாகத்தானே கருதினார்கள்.

 அதனால் அவர் அதனைக் கைவிட்டு. லண்டன் ஏ எல் செய்து.. பட்டதாரியாகி, கண்டி ரின்ரிக் கொலீஜ்ஜிலே உப அதிபராக இருந்தார். அங்கு நடந்த ஒரு போட்டியிலே ....."Mrs.Kandy", என் மாமிக்கு முதலிடம் கிடைத்ததாம். இதெல்லாம் பழைய ஞாபகங்கள், பின்னர் அங்கிருந்து எப்படியும் வெளிநாடு போயிட வேண்டுமென... முன்னமுன்னம் வந்திறங்கினார்கள் மலேஷியாவிலே... அங்குதான் என் கணவரின் படிப்பும் ஆரம்பமானதாம்...

அங்கிருந்து கிட்டத்தட்ட 25 நாடுகளில் அவர், ஆசிரியராகவும் விஞ்ஞான விரிவுரையாளருமாக இருந்திருக்கிறார், அதைவிட அவர்கள் பல நாடுகளைச் சுற்றிப் பார்வையிட்டிருக்கிறார்கள்...(சைனா, ஜப்பான் பக்கம் தான் போகவில்லை).

எங்கள் திருமணத்தின் மூலம் அவர் எனக்கு மாமா ஆனார். எப்பொழுதுமே அவர்கள் என்னை, ஒரு அடுத்த குடும்பத்துப் பிள்ளையாகவோ அல்லது மருமகளாகவோ நினைத்தது கிடையாது.

என்னை விட்டுவிட்டு மகனோடு ரகசியம் கதைக்கவேண்டும், எனக்கு சிலதை மறைக்க வேண்டும் என்றெல்லாம் நடந்ததே இல்லை. தம் மகனுக்கு வாங்கிக்கொடுப்பதைக் காட்டிலும் எனக்குத்தான் அதிகம் வாங்கித் தருவார்கள்.

நாம், அவர்களிடம் வருகிறோம் எனச் சொன்ன உடனேயே, எனக்குப் பிடிக்குமென மாமா போய், பக்கோடா, மிக்‌ஷர், இப்படியான உறைப்பான பண்டங்கள் வாங்கி வந்து போத்தலில் போட்டு மேசையில் வைத்திருப்பார். அதைவிட நாம் ஏதும் ஒரு பொருளை ஆசைப்பட்டுக் கேட்டுவிட்டால் போதும், எங்கு தேடியாவது அடுத்த நாள் வாங்கி வந்திடுவார்.

எமக்காக என்றில்லை, எம் உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ ஒரு பொருள் தேவை எனச் சொன்னால் போதும், சொன்ன நாங்களே மறந்தாலும் அவர் மறக்க மாட்டார், பணத்தை நினைக்கவே மாட்டார்.. தேடித் தந்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்.

எம் பிள்ளைகளுக்கு மட்டுமில்லை, எனது குடும்பத்தில் யாருக்கு பிறந்தநாள் வந்தாலும் பரிசும் வாழ்த்தும் கொடுக்காமல் விடமாட்டார்.... ஓய்வு பெற்ற காலத்திலிருந்து தினமும் காலையில் புறப்பட்டுவிடுவார், போய் அதிகமாக புத்தகங்களே வாங்குவார், அதைவிட குட்டிச் குட்டிச் சாமான்கள் வாங்கி வந்து எமக்குப் பார்ஷலில் அனுப்பிக்கொண்டேயிருப்பார்... வாரம் இரு பார்ஷலாவது எமக்கு வந்தவண்ணமே இருக்கும்.

கிச்சின் உபகரணத்திலிருந்து, அழகுப்பொருட்கள் வரை என்னிடம் இருப்பதில் பாதி அவர் அனுப்பியவையே. என்னிடம் இருப்பதை என் நண்பி பார்த்து ஆசைப்பட்டால், அதை நான் “மாமா நீங்கள் அனுப்பியதைப் பார்த்து என் நண்பி மிகவும் ஆசைப்பட்டார்” எனச் சொன்னால் போதும், அடுத்த பார்ஷலில் அதை அனுப்பி, நண்பிக்கு கொடுங்கள் என்பார்... இதுதான் மாமா.

அவர்கள் வீட்டுக்கு யார் வந்தாலும், சாப்பிட்டுவிட்டுப் போனால்தான் அவருக்கு திருப்தி, அத்தோடு தன்னிடம் “ஸ்ரொக்கில்” சேர்த்து வைத்திருக்கும் பொருட்களையும் பரிசாகக் கொடுத்தனுப்புவார். நாங்கள் எம் ஆன்ரி வீட்டுக்குப் போய் வந்தபின், “மாமா, இன்று ஆன்ரி ஒரு கடையில் மட்டின் ரோல் வாங்கித் தந்தா, அதன் சுவையோ சொல்லமுடியாது” என்று சொன்னால் போதும், உடனே எழுந்துபோய் தன் ரெலிபோன் புக்கை எடுத்து வந்து, ஆன்ரிக்குப் போன் பண்ணி, அக்கடை அட்ரஸ் கேட்டு, அடுத்தநாள் போய் எமக்கு வாங்கி வருவார்(எல்லாமே மனக்கண்ணில் நிற்குது).

ஏன், ஹைஷ் அண்ணனின், மருத்துவம் தலைப்பைப் பார்த்து நான் சொன்னேன், மாமா எனக்கு இன்ன இன்ன பொருட்கள் வேண்டும், அவை உடம்புக்கு நல்லதாம், முடிந்தால் அனுப்புங்கோ என்றேன், தேடித் தேடி அனுப்பினார்...... ஏனையோர் ஆச்சரியப்பட்டார்கள் , எமக்கே இப்படியெல்லாம் கடையில் இருப்பது தெரியாது, இவர் எப்படிக் கண்டுபிடித்து வாங்கினார் என. ஏன் எதுக்கு என்றுகூடக் கேட்கமாட்டார்.

அவர்களிலுள்ள நல்ல குணம், வெளிநாட்டிலேயே இருந்ததாலோ என்னவோ, கணவரும் நானும் எங்காவது போகிறோம் என்றால், தப்பித் தவறி மாமா கேட்டாலும் கேட்பார், ஆனால் எங்கே போகிறீங்கள் என மாமி கேட்கவே மாட்டா, எத்தனை மணிக்கடா வருவீங்கள் என்றுதான் கேட்பா, அதேபோல திரும்பி வீட்டினுள் நுழையும்போது ஆசையாக இருக்கும், மாமி ஓடிவந்து இருவரையும் கேட்பா.... என்ன ஊத்த? ரீ போடட்டோ? கொபியோ? ரோஸ்ட்டும் செய்யட்டோ என்று.

சில நேரம் நாம் ரீவி பார்த்துக்கொண்டிருக்கும்போது, என் கணவர் சொல்வார் “அம்மா எனக்கு கோப்பி, அதிராவுக்கு ரீ, அத்தோடு ரோஸ்ட்டும்(என் கணவருக்கு எப்பவுமே பிரெட் ரோஸ்ட் வேண்டும்) தாறீங்களோ” என, மாமி உடனேயே, ஓக்கேடா இதோ கொண்டு வருகிறேன் என்பா, இல்லை மாமி நீங்க இருங்கோ நான் செய்கிறேன் என்பேன்(உண்மையாகத்தான்), உடனே சொல்லுவா இல்லையடா நீங்க பாருங்கோ, நான் கொண்டு வருகிறேன் என்று..., நாம் சோபாவிலே இருக்க, மாமா பழங்களை வெட்டி ரேயிலே கொண்டு வந்து தருவார்.

அவர்கள் வீட்டுக்குப் போய் இருக்கும்போது, மாமா மாமியின் அறைக்குள் போய்... தேடுவேன், அழகான குட்டி குட்டிச் சாமான்கள், தட்டுகள், சுவாமிப்படங்கள், படப்பாட்டுக்கள்... விதம் விதமான சிறிய கைப் பைகள்... இப்படி நிறைய இருக்கும், எனக்குத் தேவையானதை நானே எடுத்து வருவேன். நாம் உரிமையோடு எடுத்தால் அவருக்கு இன்னும் சந்தோஷம் அதிகமாகும்.

எம் குழந்தைகளுக்கு நாம் உடுப்பு வாங்குவதேயில்லை எனலாம். விளையாட்டுப் பொருட்கள், படிக்கும் புத்தகம், கேம்ஸ்கள் எல்லாமே அனுப்பிக்கொண்டிருப்பார். உடுப்புக்கள் எப்பவுமே பல ஜோடிகள் புதிதாக
எம் வீட்டிலிருக்கும். ஒரு முறை நான் என் கணவரிடமும் சொன்னேன்... “மாமா அளவுக்கதிகமாக உடுப்புக்களை அனுப்புவதால், நான் ஆசைக்கு உடுப்பு வாங்குவதில்லை எம் பிள்ளைகளுக்கு” என்று(இப்போ நினைக்க மனவருத்தமாக இருக்கு). கடைசியாக சமீபத்தில் எம்மிடம் வந்தபோது எனக்காக வாங்கி வந்த வீட்டுக்குப் போடும் புஜாமா செட்டே... 5/6 ஜோடிகள் இன்னும் புதிதாக இருக்கு. அப்படித்தான் எண்ணிக்கை இல்லாமல் வாங்கித் தருவார்கள்.

எம் பிள்ளைகள், தமக்கு என்ன தேவையோ, உடனே அதனைப் போனிலே சொல்வார்கள், அக்கிழமையே பார்ஷலில் வந்துவிடும். மகன் சிலவேளை போன் பண்ணி ஒரு பொருளைச் சொல்லிவிட்டு, ஒரு மணித்தியாலத்துக்குள் மீண்டும் போன் பண்ணிக் கேட்பார் “அப்பப்பா அனுப்பிப் போட்டீங்களோ” என, இதோ இதோ போகிறேன், வாங்கி அங்கிருந்தே அனுப்புகிறேன் என்பார், எமக்குச் சிரிப்பாக இருக்கும்.

மாமாவுக்கு படம் எடுப்பதிலும் உடனே அதைப் பிரிண்ட் பண்ணி ஆல்பத்தில் போடுவதிலும் அலாதி பிரியம்.... கிட்டத்தட்ட பைத்தியம் என்றே சொல்லலாம். அவரது உழைப்பிலே குறிப்பிட்ட சதவிகிதம்... படம் எடுப்பதில் செலவுபண்ணியிருப்பார். தான், யார் வீட்டுக்குப் போனாலும் படம் எடுப்பார், தன் வீட்டுக்கு யார் வந்தாலும் எடுப்பார், உடனே அதை இரு கொப்பியாக பிரிண்ட் பண்ணி, இரு ஆல்பம் வாங்கி தமக்கொன்று அவர்களுக்கொன்றெனக் கொடுப்பார்.

நியூசிலாந்திலே, என் கணவர் யூனிவசிட்டி என்ரன்ஸ் பரீட்சைக்காகப் படித்துக்கொண்டிருந்தபோது, தனக்கு பாடம் சொல்லித் தராமல், அங்கு ஸ்கூல் ஹொஸ்டலில் தங்கியிருந்த தன் வகுப்பு மாணவர்களுக்கு, போய்ப் பாடம் சொல்லிக்கொடுப்பாராம், என் கணவர் சொன்னார் அந்நேரம் தனக்கு கோபம் கோபமாக வருமாம், ஆனால் இப்போ நினைக்கையில் “பிறர் பிள்ளையைத் தடவி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்” என நினைத்திருப்பாரோ என்னவோ.

எம்மோடு எங்காவது வெளியே போகும்போது, தோளில் ஒரு பாக் எடுப்பார்(அதில் கமெரா இருக்கும்), உடனே என் கணவர், என் காதில் சொல்லிச் சிரிப்பார் “பேப்பர் ரிப்போட்டர் வருகிறார் பாருங்கோ” என.

மாமாவிலும் மாமியிலும் ஒரு பழக்கம், தன் மகனுக்கு(என் கணவருக்கு) என்ன அட்வைஸ் சொன்னாலும், தம் அதிகாரத்தைத் திணிப்பதில்லை. தம் விருப்பத்தைச் சொல்லிச் சொல்வார்கள், அதிராவின் விருப்பத்துக்கேற்ப முடிவெடுங்கள் என்று. எமது மகன்கள் பிறந்தபோதெல்லாம், தம் விருப்பப்பெயர்களைப் பட்டியலிட்டுச் சொல்லிவிட்டு, என் கணவரிடம் சொன்னார்கள்... இவை எமக்குப் பிடித்த பெயர்கள், ஆனால் அதிராவுக்கு என்ன விருப்பமோ அப்பெயரையே வையுங்கோ என. நாமும் எமக்கு பிடித்த பெயரையும் வைத்து, அவர்கள் விருப்பத்தில் ஒரு பெயரையும் தெரிவு செய்து இரு பெயர் வைத்தோம்.

இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம், அதிகம் சொன்னால் படிப்பவர்களுக்கு அலுப்படிக்கும், நான் இது ஒரு டயறியாகவும் இருக்கட்டுமே என நினைத்தே எழுதுகிறேன்.

இப்படியான மாமா, சில வருடங்களாக இன்சுலின் எடுக்கும் அளவுக்கு ஆளானார், உணவுக்கட்டுப்பாடென்பதே அவருக்கு இல்லை, அதுதான் பெரிய பிரச்சனையே. என் கணவர் குழந்தையாக இருந்தபோது தொடங்கி, சனி ஞாயிறில் ஒரு நாள், ரெஸ்ட்ரோரண்ட் போய்த்தான் சாப்பிடுவார்களாம், அப்பழக்கம் இப்பவும் தொடர்ந்தது

இன்சுலின் ஆரம்பமானதும் என் கணவர் சொன்னார், அப்பா முதலில் வெளியுணவை நிறுத்துங்கோ என, (என் கணவருக்கே மருந்துகள் சொல்வார்...) அதன் பின் எமக்குச் சொல்லாமல் போய்விடுவார்கள், ஆனால் பயத்திலே போன் பண்ணும்போது மாமா சொல்லாமல் மறைப்பார் மகனுக்கு, மாமி சொல்லிப்போடுவா, அப்போ என் கணவர் கேட்பார், ஏனப்பா வெளியில் சாப்பிடப் போனனீங்கள் என்று, உடனே சொல்வார் “இல்லை இல்லை, அம்மா தான் ஆசைப்பட்டவ அதுதான் கூட்டிப்போனேன், நான் சூப்தான் குடித்தேன்” என்று.

பின்னர் அவருக்கு கிட்னி பிரச்சனையாகி, பல வருத்தங்கள் தலைகாட்டத் தொடங்கிவிட்டது, ஆனால் அவர் நன்றாகத் தான் இருந்தார், வெளியே போய் வருவதையும் நிறுத்தவில்லை. அன்றுகூட, இரவு கதைத்துக் கொண்டிருந்துவிட்டுப் போய்ப் படுத்தாராம், இரவு 2 மணிபோல் மாமி கண்விழித்தாவாம், இவர் கட்டில் விழிம்பிலே படுத்திருந்தாராம்.... மாமி தட்டியிருக்கிறா, விழப்போறீங்கள் தள்ளிப்படுங்கோ என, உடம்பு குளிர்ந்திருக்கு.... அவர் போய்விட்டார்.

ஆனாலும் மாமிக்கு இப்போ 66 வயதுதான் ஆகிறது, அவ கத்தி குழறி பெரிதாக ஆர்ப்பாட்டம் செய்யாமல், அமைதியாக அழுதா, நான் அழுதபோது எனக்கு ஆறுதல் சொன்னா “அதிரா அழாதையுங்கோடா,  மாமா சந்தோசமாக இருந்தவர், எம்மைச் சந்தோசமாக வைத்திருந்தவர், எமக்கு உலகம் சுற்றிக் காட்டியவர், அவர் சந்தோசமாகவே போய்விட்டார், சந்தோசமாகவே இருப்பார்” என எனக்கு ஆறுதல் சொன்னா,.....  அவவின் இந்த ஏற்றுக்கொள்ளலை நினைத்து நாம் சந்தோசப்பட்டோம்.

எனக்கு இப்பதிவைப் போடும்வரை, ஏதோ நான் மாமாவுக்கு குறை விடுகிறேன், என்பதுபோல இருந்தது, இப்போ கொஞ்சம் பாரம் குறைந்திருக்கு.


பின் குறிப்பு:


மண் குடிசை வாசல் என்றால், தென்றல்வர மறுத்திடுமோ.... உனக்காக ஒன்று, எனக்காக ஒன்று ஒருபோதும் இறைவன் கொடுத்ததில்லை....
==========================================================

Thursday, 27 January 2011

“மை லைலா”


ஆ..... என்னதிது, தலைப்பைப் பார்த்ததும் இலாவும் ஜெய்லாவும் பொல்லோட துரத்துறீங்க... அடிக்காதீங்க “அடிச்சா வலிக்குமில்ல?”:).  நான் சொல்லியிருக்கிறேனில்ல? “விழுவதை எல்லாம் பொறுக்குவதுதான் என் வேலை:)”. இத் தலைப்பைப் பார்த்தபிறகாவது தண்ணிக்குள்ள இருக்கிற ஆட்கள் வெளில வருகினமோ பார்ப்போம்.

சே...சே.. சொல்ல வந்ததை மறந்தே போனேன் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லை. கிட்டத்தட்ட 6 மாத இடைவெளியில் எனக்கு ரெண்டே ரெண்டு அவார்ட்ஸ்தான் கிடைச்சிருக்கு:(, அதையும் ஜல்...ஜல்.... ஜலீலாக்காதான் குடுத்திருக்கிறா. மியாவும் நன்றி ஜலீலாக்கா.


இது சூப்பரா இருக்கில்ல?


இது பற்றி நான் இப்போ எழுதமாட்டேனே....

ஒழுங்கா, தினமும் புளொக்குக்கு வாறவர்களுக்கு, புளொக்கை ஒழுங்கா எழுதுபவர்களுக்கு.... பார்த்துப்பார்த்து, கூப்பிட்டுக் கூப்பிட்டு அவோர்ட் குடுக்கினம். ஆனால் புளொக்குக்கு இடையில வராமல் இருப்பவர்களுக்கு அவோர்ட்டே குடுக்கமாட்டினமாம். இது எவ்ளோ பெரிய கொடுமை?:).

உண்மையில கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க,  தினமும் புளொக் பக்கம் வாறம், படிக்கிறம்.... ஆனால் தொடர்ந்து ஒருமாதமாவது புளொக் பக்கம் எட்டிப் பார்க்காமல் ஆருக்காவது இருக்க முடியுதா?. இப்போ எமக்குப் பிடித்தவர்களோடு தினமும் கதைக்கிறம்.. சிரிக்கிறம்...., ஆனால் ஒரே ஒருநாள் அவர்களை முன்னால் வைத்துக்கொண்டு பேசாமல் இருக்க முடியுதா எம்மால்? அது எவ்ளோ கொடுமை?. அப்போ நீங்களே சொல்லுங்க எதுக்கு அவோர்ட் கொடுக்கோணும்.

அம்மா வாங்க, ஐயா வாங்க, அண்ணா வாங்க, அக்கா வாங்க, தம்பி வாங்க..(முன்பும் சொல்லிட்டேன்:)... எனக்கு தங்கை யாருமில்லை:) இங்கு தங்கை நான் தேன்..:)).. எல்லோரும் வாங்க... எல்லோருக்கும் இடது பக்கத்தில இதயம் இருக்குதில்ல? இதயத்தின் இடதுபக்க அறையின்மேல் கையை வச்சுக்கொண்டு இப்போ சொல்லுங்க.... முறையாப்பார்த்தால்... அதிராவுக்கு அதிகம் அவோர்ட் கொடுத்திருக்கோணுமெல்லோ?:)... ஆ... முறைக்காதீங்க, நீங்க முறைச்சா இதயம் வலிக்குமில்ல?(எனக்கு).

எனக்கு கொஞ்ச நாளா ஒரு சந்தேகம், என்னைப்பார்த்து ஏசீனம், முறைக்கினம் அடிக்க வருகினம்.... ஒருவேளை எனக்கு இதயமே இல்லையோ என்று, அதால டொக்ரரிடம் செக்பண்ணினேன்... அவர் சொல்லிட்டார்(நேற்றுத்தான்:)) யூ ஹாவ் எ குட் கார்ட்... என்று. அதில இடது பக்க இதயவறையும் பத்திரமா இருக்காம்.... இனியென்ன... தங்கியூ சொல்லிட்டேன் டொக்ரருக்கு.

இதைச் சொன்னதும் எப்பவோ ஒரு காலத்தில படித்த கவிதை நினைவுக்கு வந்துவிட்டது....

“இதயமே இல்லாத எனக்கு
இதய நோயாம்
என்னைப் பரிசோதித்த
டாக்டர் சொன்னார்
அவருக்கு எப்படித் தெரியும்
நான் - என் இதயத்தை
உன்னிடம் தந்ததையும்
அதை நீ கசக்கி
வீதியிலே வீசிஎறிந்ததையும்”

இந்தாங்கோ ரிசூ... சே.. டிஷ்யூ.... வீட்டுக்கு வாறவைக்கு கேக், வடை அப்படி ஏதும் கொடுத்தால் டிஷ்யூவும் சேர்த்துக் குடுக்கிறமெல்லோ? அப்படித்தான், இப்படிக் கவிதை எழுதினாலும் டிஷ்யூக் குடுக்கோணும், அது கை துடைக்க, இது கண்ணீர் துடைக்க:).


ஊசி இணைப்பு:).
வெளியில நேரா நின்றாக்கூட இப்படி ஒரு படம் அனுப்ப முடியுமோ?:), இது தண்ணிக்குள்ள(இது வேற தண்ணி:)) தலை கீழாக நின்றும் எவ்ளோ சூப்பர் படம் எடுத்து அனுப்பியிருக்கினம்..  இது மணி கட்டின பூஸார்..ர்..ர்..ர்..:).

==========================================================
படித்ததில் பிடித்தது:
என்ன வேண்டுதலோ…
மொட்டை போட்டது மரம்
இலையுதிர் காலம்!
==========================================================

காக்கா போங்கோ:
இல்ஸ்ஸ் நீங்க சொன்னதுபோல, பிளேன் தண்ணிக்குள்ளதான் லாண்ட் ஆயிட்டுதோ? எனக்குப் பக்குப் பக்கெண்டிருக்கு...
.................................................................................................................................................................................

Saturday, 22 January 2011

கனியிருப்பக் காய் கவர்தல்


நெடுநாள் மனதில் இருந்த புதையல், இன்று எப்படியும் மேடையேற்றிட எண்ணி களம் இறங்கிட்டேன்.

எனக்கு சின்ன வயது ஞாபகங்கள் அப்படியே பசுமரத்தாணிபோல மனதிலே இருக்கு. நான் முதன் முதலில் கடிதம் எழுதத் தொடங்கியது என் 7 ஆவது வயதில் என நினைக்கிறேன்.

எமது ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவர், அப்போது யூனிவசிட்டி கிடைத்துப் போயிருந்தார். அவர் எப்போதும் என்னோடு நன்கு பாசமாக இருப்பார். யூனி போனதும் அங்கிருந்து எனக்கு மட்டும் தனியாக ஒரு என்வலப்பில் என் பெயர்போட்டு முகவரி இட்டு மெயில் அனுப்புவார், வீட்டில் ஏனையோருக்கு ஒரு மெயில் அனுப்புவார். அந்த வயதில் என் பெயரில் முகவரியிட்டு மெயில் வருவது எனக்கு தாங்கமுடியாத மகிழ்ச்சியைக் கொடுக்கும். வீட்டில் அண்ணன், அக்கா எல்லோரும் என்னைக் கலைப்பார்கள் கடிதம் படிக்க, நான் ஏதாவது அவர்களிடம் பெற்றுக்கொண்டு (கன்டோஸ், மிட்டாய்... etc.,) படிக்கக் கொடுப்பேன்.

பின், அம் மெயிலை என்னிடமிருந்த குட்டி சூட்கேஷில் பத்திரமாக அடுக்கி வைப்பேன். அவரின் எழுத்து முத்து முத்தாக இருக்கும். எனக்குப் புரியவேண்டும் என்பதற்காக, இன்னும் அழகாக அச்சிட்டதுபோல எழுதுவார். எழுதும் பேப்பரிலும் கோடுகள் வரைந்து அழகாக்கி அனுப்புவார். நான் எப்பவும் எனக்குப் பிடித்தவர்களை என் ரோல் மொடலாக எடுத்துக்கொள்வது வழக்கம், அவர்களின் நடை உடை பாவனைக்கு நானும் மாற முயற்சிப்பேன்(இப்பவும்தான்). அதுபோல் அவரின் எழுத்துக்களை பார்த்துப் பார்த்து நானும் அழகாக்கி எழுதப்பழகுவேன்.

எனக்கு கவிதை, பழமொழிகள், பொன்மொழிகள்.... ஏன் கண்ணதாசனில்கூட ஆர்வம் உருவாக வித்திட்டவர் அவரென்றே சொல்லலாம். அந்தளவுக்கு கடிதத்தில் எப்படியும் ஒரு பொன்மொழியோ பழமொழியோ அல்லது தத்துவமோ எனக்குப் புரியக்கூடிய வகையிலே எழுதுவார். அவரது கடிதம், கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் புத்திமதியாக, நல்ல அன்பாக, ஒரு குழந்தைக்கு எது நல்லதோ அவ்வகையில் அமைந்திருக்கும். இரு பக்கங்களாவது எழுதுவார், நானும் அப்படியே ஸ்கூல் நியூசிலிருந்து வீட்டு நியூசெல்லாம் கொடுப்பேன் பெரிய பதிலாக.

அப்போது எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம், அவரது கடிதம் வந்த மறுநாளே நான் போட்டுவிடுவேன், ஸ்கூலால் வந்ததும் கடிதம் வந்திருப்பின் வாசித்த கையோடு, மேசையில் எல்லாம் இருக்கமாட்டேன், நடுக் ஹோலிலே, நிலத்திலே படுத்திருந்துதான் எழுதுவேன், பின்புதான் சாப்பிடப்போவேன். அதேபோல என் கடிதம் கிடைத்ததும், என்ன படிப்பென்றாலும் பதில் போட்டுவிடுவார்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால், எனக்கு அட்ரஸ் எழுதவெல்லாம் தெரியாது, எனவே கடிதத்தை எழுதி அப்பாவிடம் கொடுத்துவிடுவேன், அவர் ஒபீஸ் போகும்போது/வரும்போது போஸ்ட் பண்ணிவிடுவார்.. அப்பாதான் எனக்கு அப்போ தபால்காரர்:).

ஒரு தடவை கடிதம் எழுதி அப்பாவிடம் கொடுத்தேன், எத்தனை நாளில் பதில் வருமெனத் தெரியும், ஆனால் பதில் வரவில்லை, மீண்டும் இன்னொரு கடிதம் எழுதினேன், அப்பாவிடம் கொடுத்தேன், பதில் இல்லை. அப்போ வீட்டில் ரெலிபோன் வசதியெல்லாம் இல்லை. எப்பவாவது விடுமுறை தினத்தில் அப்பாவின் ஒபீஸ் போய் ரெலிபோன்(ஆசைக்கு) யாருடனாவது கதைப்பதுண்டு, ஆனால் இவருடன் கதைக்கமுடியாதென நினைக்கிறேன், கதைத்ததாக நினைவில்லை.

மூன்று கடிதங்கள் போட்டுவிட்டேன் பதில் இல்லை. எனக்கு கோபம்தான் வந்தது, அப்படிப் பதில்போடமுடியாமல் போய்விட்டதே அவரால், ஒருவேளை மறந்துபோய்விட்டாரோ என்றெல்லாம் அந்தக் குட்டி மனதில் கோபம் வந்துவிட்டது.

உடனே அதேபோல குப்புறக்கிடந்து இன்னொருமடல், என் கடிதத்துக்கு ஏன் பதில் போடவில்லை என கோபமாக என்ன எழுதினேனோ நினைவில்லை எழுதி, மீண்டும் என் மதிப்புக்குரிய, நம்பிக்கைக்குரிய தபால்காரரான அப்பாவிடம் கொடுத்து, கொடுக்கும்போது, அப்பாவுக்கும் ஏசினேன், பாருங்கள் அப்பா எத்தனை நாளாகிவிட்டது, நானும் மூன்று கடிதங்கள் போட்டுவிட்டேன் பதில் இன்னும் வரவில்லையே எனச் சொல்லியபடி கொடுத்தேன். அப்பா ஒரு புன் முறுவலோடு, கடிதத்தை வாங்கி, அப்படியா ஆச்சி? என சொல்லிக்கொண்டு பொக்கட்டில் வைத்துக்கொண்டு போய் விட்டார்.

மீண்டும் பழையகணக்குப்படி சரியான நாளில் பதில் வந்திருந்தது. இம்முறை பெரிய கடிதமாக பல பக்கங்களில் பதில் வந்திருந்தது. அவர் எழுதித்தான் எனக்கு உண்மை தெரியவந்தது. நடந்தது என்னவென்றால்...

நான் கடிதத்தை எழுதி அப்பாவிடம் கொடுக்க, அப்பாவுக்கு அந்நேரம் ஒபீஷில் ஏதோ கடும் வேலைபோலும், அதனால் என் கடிதங்களை ஒபீஷ் ரேபிள் லாச்சியில் போட்டு வைத்திருக்கிறார், அனுப்பவில்லை.

நாலாவது கடிதம் கொடுத்தபோது நான் ஏசினேன் தானே, அதன்பின்புதான் போஸ்ட் பண்ணவில்லை என நினைவு வந்து, அப்பா தானும் ஒரு கடிதம் எழுதி, தான் தான் மறந்துவிட்டேன் என, எல்லாக் கடிதத்தையும் ஒரு என்வலப்பிலே வைத்து அனுப்பியிருக்கிறார்.

அப்போதான் அவர் எழுதியிருந்தார், உங்கள் பதில் பார்த்து மிகவும் கவலையடைந்துவிட்டேன். ஏன் என்னோடு கோபித்தீங்கள்? தவறு என்னில் இல்லை, நீங்கள் எப்படி என்னைத் தவறாக நினைத்தீங்கள், என் பதில் வராவிட்டாலும்கூட, நான் பதில் அனுப்பவில்லையே என தப்பான முடிவுக்கு வரக்கூடாது. எனக்கும் எக்ஸாம் நேரமாகவும் இருந்தது, உங்களிடமிருந்தும் பதில் வரவில்லை எனவேதான், எக்ஸாம் முடியட்டும் என விட்டிருந்தேன். எமக்கு கோபம் வந்து, அக்கோபத்தோடு ஒரு கடிதம் எழுதும்போது, அந் நேரம் அது எமக்கு சரிபோலத்தான் தெரியும். ஆனால், எப்பவுமே நாம் ஒரு கடிதமோ பதிலோ அடுத்தவருக்கு அனுப்பும்போது, எழுதுபவராக மட்டும் இருக்கக்கூடாது, வாசிப்பவராகவும் இருந்து, அந் நேரம் வாசிப்பவரின் மனநிலை எப்படி இருக்குமென்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.



“அன்பற்ற இடத்திலிருந்து வரும்
மலையளவு எதிர்ப்பையும்
தாங்குகிற இதயம்,
அன்புள்ள இடத்திலிருந்து வரும்
கடுகளவு எதிர்ப்பைக்கூட
ஏற்க மறுக்கிறதே”

இப்படியெல்லாம் இன்னும் ஏதேதோ... (இப்ப இருந்திருந்தால் அக் கடிதத்தையே ஸ்கான் பண்ணிப்போட்டிருக்கலாம், இடம்பெயர்வுகளோடு அந்த குட்டி சூட்கேஷும் தொலைந்துவிட்டது) எழுதி, முடிவிலே இதை எழுதியிருந்தார்...

“இனிய உளவாக இன்னாத கூறல், கனியிருப்பக் காய் கவர்ந்தற்கு”

அவர் இதுக்கு மட்டும் கருத்துக்கூறவில்லை, கண்டுபிடியுங்கள் என்றுதான் எழுதியிருந்தார். அத்துடன் அப்பிரச்சனை முடிந்து கடித எழுத்துக்கள் தொடர்ந்தது. எனக்கு அது திருக்குறள் எனத் தெரியாது, ஏதோ பழமொழி என நினைத்துவிட்டேன். ஏன் அப்பா அம்மாவிடம்கூட விளக்கம் கேட்காமல் விட்டேன் எனவும் நினைவில்லை.

ஆனால் சின்ன வயதென்பதால், அதெல்லாம் பசுமரத்தாணிபோல மனதிலே பசுமையாக படிந்துவிட்டிருந்தது. அதனால் இன்றுவரை, ஒரு மெயில் எழுதும்போதுகூட அது நினைவுக்கு வரும். இருப்பினும் என்னதான் கவனமாக இருந்தாலும், சில நேரங்களில் விதி தவறாகி, கண்ணை மறைத்து,  வேண்டுமன்றல்ல, யோசிக்காமல் மெயில் அனுப்பி விடுவதுமுண்டு. அது தவறுதான். கடிதம் போஸ்ட் பண்ணியபின், ரேசர் போட்டு அழிக்கவா முடியும்.

“தவறு செய்யாதவர் மனிதர் அல்ல - அதே நேரம்
தன் தவறை உணர்ந்து (மன்னிப்பு கேட்டு) திருந்தாதவரும் மனிதர் அல்ல”.

பின் குறிப்பு:
இக்கடிதம் உணர்த்தும்(எனக்கு உணர்த்தியிருக்கும்) இரு உண்மைகள் என்னவென்றால். குழந்தைப்பிள்ளைதானே என அலட்சியம் கொள்ளாமல், முடிந்தவரை அதுக்கும் புத்திமதிகள், அறிவுரைகளை அன்பாக சொல்லிக்கொடுக்கோணும்... நிட்சயம், அது புரியாதுவிட்டாலும் மனதில் பதியும், வளர வளர அர்த்தம் புரிந்துகொள்ளும். எமது குழந்தையென்றல்ல, எமக்கு பிடித்த யாரின் குழந்தையானாலும் சரி.. அன்பைக் கொடுத்தால் அன்பைப் பெறலாம்.



அடுத்தது, எப்பவுமே நாம் எழுத்தாளராக மட்டும் இல்லாமல் அதை வாசிப்பவராகவும் இருந்து, வாசிக்கும்போது அடுத்தவரின் மனநிலை எப்படியிருக்கும்.. அதாவது ஒருவேளை எனக்கு இப்படியொரு கடிதம் வந்திருந்தால், என் மனநிலை எப்படி இருக்கும் என எண்ணியபின்னே போஓஓஓஒஸ்ட் பண்ணோனும்.

இந்தக் கண்ணில ஏதாவது தெரியுதா?

Saturday, 8 January 2011

கொசிப்பூ (1)

பிறகு காலையும் கொம்பையும் எடுத்துப்போட்டு ஆரும் வாசிச்சிடப்பூடாதூஊ:)).


சிரிக்க முடியாமல் போச்சு, அதேன் இப்பூடி

இது என் புதுத் தலைப்பல்ல. முந்தினது பெரிதாகி விட்டதால்தான் இதைப் போடுகிறேன். ஆருக்கும் பொழுது போகவில்லையாயின் இங்கு வந்து “விடுப்ஸ்” சொல்லிப் போங்கோ. என்னோடு மட்டுமில்லை ஆரோடு வேணுமெண்டாலும் கதையுங்கோ. இன்று இருக்கிறோம், நாளை நம் கையில் இல்லைத்தானே, எனவே சோகங்கள் நெஞ்சோடு இருந்தாலும் வெளியே கதைச்சுச் சிரிப்போம் வாங்கோ.

விடுப்ஸ் = புதினம்(புறுணம்) = கொசிப்ஸ் = அரட்டை... இது சரிதானே?
...................................................................................................................................

ம்ம்ம் எவ்ளோ நேரம்தான் காத்திருக்கிறது?

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஆரும் சொல்லிக் குடுத்திடாதையுங்கோ:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

உஸ்... அப்பாடா, இதில நித்திரைகொண்டால்தான் காத்து வடிவாப்புடிக்குது:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


பின் இணைப்பு:
பார்த்தேன், படித்தேன் பிடித்திருந்தது... நட்புக்கும் பொருந்துது.


==========================================================
ஒரு வெளவால் வீட்டுக்கு
இன்னொரு வெளவால் வந்தால்,
அதுவும் தொங்கிக்கொண்டுதானிருக்கும்
==========================================================

Friday, 13 August 2010

சும்மா!! சும்மா:)).

எதிர்பாராதவேளை திடீரெனக் கிடைத்தது..... ஆசியா விடமிருந்து. மிக்க நன்றி ஆசியா. கொஞ்சம் பாரம்தான், பெரிய பிளேன் என்றதால அஜீஸ் பண்ணிக்கொண்டுவந்திட்டேன். மியாவும் நன்றி ஆசியா.


எங்கள் வீட்டிலிருந்து, எங்கட:) ஆற்றங்கரைக்கு செல்லும் ஒரு குறுக்குப் பாதை:


ஆற்றங்கரை ஓரத்திலே.... யாருமற்ற நேரத்திலே.... பூஸ் இருந்த கற்பாறைகள்:)


 ஆற்றங்கரைக்கு போனபோது வந்துகொண்டிருந்தது இந்த கொன்ரெயினர் ஷிப்.



ஆற்றோரமா அந்தப்பக்கமா.... வீடுகள்...




ஆற்றோரத்திலே தானாகப்பூத்திருக்கும் ரோஜா....


ஆற்றோரத்தில் தேடுவாரில்லாமல் பழுத்திருக்கும் ராஸ்பெரிப் பழங்கள்.




இது எங்கள் பக்கத்து,பக்கத்துவீட்டு ரோட்டுக்கரையில் இருக்கும் ஆப்பிள் மரம்... இப்போதான் காய்கள் வந்திருக்கு.




தம்பி கதையளக்கிறார்:




உஸ், பேபி பூஸ் நித்திரை, வாயால கதைக்காமல் எல்லோரும் கையால கதையுங்கோ..... இப்போ எழும்பினால், குடுக்க  வீட்டில புட்டிப்பால் முடிஞ்சுபோச்சு:))


VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV
பின் இணைப்பு:
படித்ததில் ரசித்தது:

தினமும் தோற்றுப்போகிறேன்
பேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால்
VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV